மதுமதியின் புதிய வலைப்பூவில் முதல் மலராக நகைச்சுவை என்னும் அல்லிமலரை தேன் சிந்தும் சந்திரனுக்கு சமர்ப்பிக்கிறேன்
நவீன இலக்கியத்தில் நகைச்சுவை.
மானுடனுக்கு உரித்தான தனிப்பட்ட குணங்களில் சிரிப்பும், நகைச்சுவை உணர்வும் தான் அவனை மற்ற உயிரினங்களிலிருந்து மாறுபட்டு இருக்கச் செய்கின்றது. வாயைத் அசைத்து உதடுகளைப் பிரித்தோ அல்லது பற்களைக் காட்டியோ மனதில் எழும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முறை வேறு எந்த விலங்கினத்திற்கு வரும்? நம் முன்னோர்களான குரங்குகள் வேண்டுமானால் இதில் கொஞ்சம் தேர்ச்சி பெற்றுள்ளன எனலாம். ஆனால் அவர்களை யார் கேட்பது? அதிருக்கட்டும். நாம் மேலேஆராய்வோம்.
மனதில் எழும் மகிழ்ச்சியான எண்ணமே நம் முகத்தில் பிரதிபலித்து, உதடுகளில் அசைவை ஏற்படுத்துகின்றன எனலாம். இதற்கு அடுத்தபடியாக எண்ணங்களில் வேறு வகையான சலனங்கள் ஏற்பட்டு அவை சொற்களின் மூலமாக வெளிபடும் பொழுது அவைகளை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கும் அதே உணர்ச்சியை எற்படுத்துகிறோம். இந்த உணர்வையே நகைச்சுவை உணர்வு என்கிறோம். இவைகளை எழுத்து வடிவமாகக் கொணரும் பொழுது நகைச்சுவை இலக்கியம் உருவாகிறது.
நகைச்சுவை என்பது, ஹாஸ்யம், நையாண்டி, பரிகாசம், கடி வஞ்சப்புகழ்ச்சி, உயர்வு நவிற்சி அணி மற்றும் சிலேடை போன்ற பல வடீவங்களில் கையாளப் படுகின்றன.
நகையுணர்வு என்பது கிட்டத்தட்ட கடவுள் போலவே ஆகும். கடவுளைப் போலவே அது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆனால் நாம் பார்க்கும் பார்வையின் மூலம் தான் அதை கண்டு பிடிக்க வேண்டும். உதாரணமாக, தினமும் நாம் துயிலெழுந்தவுடன் பற்பசையின் முன் தான் விழிக்கிறோம். சே, இன்னுமொரு டென்ஷன் நிறைந்த காலையா என்று முணுமுணுக்காமல் “இந்த ட்யூபிலிருந்து பேஸ்டை எடுத்தபின் மறுபடியும் உள்ளே தள்ள முடியுமோ? நோ நோ அது அந்தக் கடவுளாலேயே முடியாதாக்கும்” என்று நினைத்துக் கொண்டால், தன்னையும் அறியாமலேயே சிரிப்பு வரும்; இலவச இணைப்பாக காலை நேரத்தில் ஆண்டவனை நினைத்துக் கொண்ட புண்ணியமும் கிடைக்கும்.
இப்படியே அன்றாட வேலைகளில் பல நகைச்சுவை உணர்வுகளை துணக்குத் தோரணங்களாக தூணுக்குத் தூண் கட்டிவிடலாம். நாமும் டென்ஷன் ஃப்ரீயாக நாள் முழுவதும் இருக்கலாம்
தூணுக்கு எங்கே போவது என்கிறீர்களா? அது ஒரு ப்ரச்சினை தான். இன்றைய ஃப்ளாட்டுகளில் தூண்கள் எங்கே இருக்கின்றன? பிரஹ்லாதன் கூப்பிட்டால் கூட நரசிம்மன் அவதாரம் எடுப்பதற்கு தூணைத் தேடிக் கொண்டு அலைய வேண்டி வரும். அதற்குள் ஹிரண்யகசிபு தவம் செய்து வேறு வரம் வாங்கி விடுவான்.
நகைச்சுவை உணர்வைத் தேவதைகளுக்குக் கூட நாம் உரிமையாக்குகிறோம். தொடங்கப் போகும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் விநாயகப் பெருமானை வணங்குகிறோம் அல்லவா? அவருக்கு மற்றொரு பெயர் விகடனார் என்பதே. அவர் கதை தான் உங்களுக்குத் தெரியுமே.
அப்பா சொல்லி விட்டார் என்பதற்காக சின்னவன் மயில் மேல் ஏறி படு சீரியஸாக ஊரையும் உலகையும் சுற்றக் கிளம்ப, நம் குண்டு நாயகரோ விளையாட்டாக மூஞ்சூர் மேல் ஏறிக் கொண்டு அப்பா அம்மாவைச் சுற்றி வந்து விட்டார். தட்டிக் கேட்டால் மூஞ்சியை அப்பாவித் தனமாக வைத்துக் கொண்டு எனக்கு எல்லாமே அம்மா அப்பா தான். உலகமே அவர்கள் காலடியில் தானே இருக்கிறது என்று ஐஸ் வைத்தார். ஏற்கெனவே பனிமலையில் இருக்கும் சிவனாருக்கு மேலும் உச்சி குளிர்ந்து விட்டது. மூத்த மகனுக்கு மாம்பழத்தைத் தூக்கிக் கொடுத்து விட்டார். பார்த்தீர்களா நகைச்சுவையைக் கையாண்டால் ஒரு சுவையான மாங்கனியே கிடைக்கிறது.
நம் ஹாஸ்யக் கவிகள் மும்மூர்த்திகளைக் கூட விட்டு வைக்கவில்லை. காளமேகப் புலவர் என்ற புகழ் பெற்ற கவிஞர் சிலேடை மொழியில் பல கவிதைகளை இயற்றி உள்ளார். தினமும் எந்த எண்ணமும் இல்லாமல் நாம் குடிக்கும் மோரைக் கூட சாட்சாத் திருநாராயணனின் அவதாரமாகப் பாடுகிறார். அந்தக் கதை இவ்வாறு போகிறது.
அக்கினி நட்சத்திரத்தால் தகிக்கும் கோடைக் காலம். புலவருக்கோ பெரும் தாகம். எதிரே மோர் விற்று வரும் கிழவி வருகிறாள். புலவரும் வாங்கிக் குடிக்கிறார். அது நீரா அல்லது மோரா அல்லது இரண்டும் கலந்த ஸ்ரீ ராமநவமியா என்றே தெரியவில்லை. ஆனாலும் வெய்யிலுக்கு இதமாக இருக்கிறது. கிழவியோ காசுக்கு பதிலாக கவிதை கேட்கிறாள். கவிஞருக்கு நா வறட்சியே தவிர நாவில் புரளும் கவிதையில் வறட்சியில்லை. அம்மணி உங்கள் மோரும் பாற்கடலில் துயில் பரந்தாமனும் ஒன்றே என்று கூறி இவ்வாறு பாடுகிறார்:
கார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீர் என்று பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின்
வார் ஒன்று பூங்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
நீர் என்று பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின்
வார் ஒன்று பூங்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே
அதாவது மோரே நீ கார்முகில் வண்ணனான கண்ணனுகே சமமானவன். உன்னுடைய முதல் அவதாரம் மேகமாக சஞ்சரித்தது. பின் நீராய் பிறவி எடுத்தது. மூன்றாவதாக தேவகியிடம் பிறந்தாலும் யசோதையிடம் புகுந்தது போல், நீயும் பூமியில் பிறந்து இந்த இடைச்சியின் குடத்தில் புகுந்து கொண்டாய். அவளும் உனக்கு மோர் எனப் பெயர் சூட்டி மகிழ்கிறாள்.
அறுவத்தி நாலாவது நாயன்மாராகக் கருதப்படும் திருமுருக கிருபானந்த வாரியார் கூட நகைச்சுவை உணர்வுக்குப் பேர் போனவர். ஒவ்வொரு வார்த்தையயும் சொல் விளையாட்டகவே விளையாடுவார். குறமங்கைக்கு வள்ளி என்ற பெயர் ஏன் வந்தது தெரியுமா? முருகன் வரங்களை அளிப்பதில் வள்ளல். அவன் மனைவி வள்ளியாகத் தானே இருக்க வேண்டும் என்பார். கந்தன் வள்ளல், எனவே குறமங்கை வள்ளியாவாள்.
சரி தேவலோகத்திலிருந்து இறங்கி பூலோகத்திற்கு வருவோமா?
பண்டைய தமிழர்கள் தம் நகைச்சுவை உணர்வை கவிதையின் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார்கள். முறத்தால் தமிழ்ப் பெண்கள் புலியை விரட்டினதாக மேற்கோள்கள் உண்டு. அம்மாதிரி கதைகள் அவர்களுடைய வீரத்தை மட்டுமா காட்டுகின்றன? ஹாஸ்ய உணர்வைக் கூடத்தான் காண்பிக்கின்றன. இப்பெண்கள் முறத்தை தூக்கினால் கருணையினால் தங்களுக்கு விசுறுகிறார்கள் என்று புலிகள் நினைத்திருக்குமோ என்னமோ. ம்னதால் ஒரு குட்டி தேங்க்ஸ் சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றிருக்கும்.
நிற்க, பரவாயில்லை உட்கார்ந்து கொண்டே மேலும் படியுங்கள்.
கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழ் இலக்கியத்திற்கு நகைச்சுவை சிரிப்பு வண்ணம் பூசி அதை மெருகேற்ற பல எழுத்தாளர்கள் முயன்றிருக்கிறர்கள். வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். அவர்களில், கல்கி ரா கிருஷ்ணமூர்த்தி தனி இடத்தைப் பெற்றிருக்கிறார். வீரமும், சோகமும், ஸஸ்பென்ஸும் எமோஷன்ஸும் முக்கியமாக இடம் பெற்ற அவருடைய சரித்திர புதினங்களில் கூட சிரிப்பும், வேடிக்கையும் ஹாஸ்யமும் பட்டத்தின் வால் போல தொடர்ந்து கொண்டே இருக்கும். பொன்னியின் செல்வனின் ஆழ்வார்க்கடியானை யாரால் தான் மறக்க முடியும்? இந்தக் கால மொழியில் சொல்ல வேண்டுமானால் பல கடி ஜோக்ஸை அவன் கைவசம் எப்போதும் வைத்திருப்பான். இதுவே இப்படி என்றால் முழு நீள நகைச்சுவை நாவல்களையும் கட்டுரைகளைப் பற்றியும் கேட்கவே வேண்டாம். கைய்எழுத்துப் ப்ரதியாக வைத்திருந்த ’கமலாவின் கல்யாணம்’ எனும் துப்பறியும் குறுநாவலில் நகைச்சுவை காட்சிகளும் சம்பாஷணைகளும் அள்ள அள்ளக் குறையாமல் வந்து கொண்டே இருக்கும்.
ஆழ்வார்க்கடியானுக்கு நன்றி கூறி விட்டு துப்பறியும் சாம்புவை கூப்பிடலாமா? தற்பொழுது வயது அறுபதைத் தாண்டியவர்களும் தாண்டுவதற்கு தயக்கம் காட்டுபவர்களும் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் தமிழ் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்திருந்தால் தேவனின் துப்பறியும் சாம்புவை சந்திக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். எடுப்பான கிளி மூக்கு, மற்றும் அந்த கறுப்பு கோட்டு, முழுக்கைச் சட்டை எல்லாவற்றுக்கும் மேலாக முகத்தில் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் அந்த அசட்டுக் களை. இந்த அமர கதாபாத்திரத்தை உருவாக்கியவர் எஸ் மஹாதேவன் என்னும் தேவன் அவர்கள். அப்பாவி முகத்தை வைத்துக் கொண்டே பெரிய திருட்டுக்களின் முடிச்சவிழ்த்த துப்பறியும் சாம்பு பண்ணின லூட்டிகளை இன்றைய தலைமுறை படிக்கவில்லையே என மனம் ஏங்குகிறது.
அடுத்து சாவியை எடுத்துக் கொள்ளலாமா? பூட்டு எங்கே என்று கேட்கிறீர்களா? மனமெனும் கஜானாவில் கொட்டிக் கிடந்த நகைச்சுவைப் பெட்டகங்களை முடிவே இல்லாத தொடர் கூட்ஸ் வண்டி போல வாராவாரம் ஆனந்தவிகடனில் வெளியே எடுத்துக் கொண்டிருந்த சாவி எனப்படும் மாபெரும் எழுத்தாளர் சாவியைத்தான் குறிப்பிடுகிறேன். உலகமே ஒரு கிராமமாகி விட்ட இன்றைய தேதியில் அண்டார்டிகாவில் கூட நம் பக்கத்து திருமணங்கள் நடைபெற ஒரு கஷ்டமும் இல்லை. ஆனால் சற்று யோசித்துப் பாருங்கள், முப்பது வருடங்களுக்கு முன்னர் தன் கற்பனையிலேயே மேல்நாட்டில் ஒரு தமிழ்த் திருமணத்தை நடத்திக் காட்டியிருக்கிறார். அதில் நிகழும் ஒவ்வொரு சம்பவமும் அமெரிக்காவில் நடப்பதனால்அந்த பின்னணியில் ஒவ்வொன்றையும் விவரிப்பது, அதுவும் நகைச்சுவை உணர்வுடன் என்பது மிகவும் கடினமாகும். அதில் அவர் விவரிக்கும் நிகழ்வுகளை நினைட்த்தாலும் வாய்விட்டுச் சிரிக்கவே தோன்றும். சாஸ்திரிகள் பொடாமாக் நதியில் சந்தியாவந்தனம் செய்வதும், பூசனிக்காயை தூக்க முடியாததால் ப்ளாஸ்டிக் கைப்பிடி போட மாண்புமிகு ராக்ஃபெல்லெர் உத்தரவிடுவதும், தஞ்சாவூர், திருநெல்வேலி முதலிய பாட்டிகள் இட்டு போடும் அப்பளங்களின் எண்ணிக்கையை ஸ்கோர் போர்டில் வெளியிடுவதும், பொரித்த அப்பளங்களை உடைக்காமல் எப்படி சாப்பிடுவது என்று அமெரிக்கர்கள் முழிப்பதும், எதைச் சொல்வது எதை விடுவது? அப்பப்பா சிரித்து சிரித்து வயிறு புண்ணாகாமல் என்ன செய்யும்?
அமரர் சாவிக்க்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு பாக்கியம் ராமசாமி உருவாக்கிய சீதாப்பாட்டிக்கு மஞ்சள் குங்குமம் கொடுத்து வரவேற்போமா? அவருடன் இல்லாத பற்கலை நற நற என்று கடித்துக் கொண்டு வரும் அப்புசாமியின் பின்னால் வருவது ரஸகுண்டு, பீமாராவ் போன்ற இரட்டை வால்கள் தான். குமுதம் பத்திரிகையின் ஸர்குலேஷனை பன்மடங்காக்கிய புண்ணியம் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியையே சாரும். இன்றும் வலைதளத்தில் தனக்கென்று இடம் பிடித்து கொண்டிருப்பவர் அவர். ஆப்புசாமி.காம் என்ற வலைப் பூவில் பற்பல நகைச்சுவைத் துணுக்குகளையும் படித்து கவலையை மறக்கலாம். இவர்களைத் தவிர சுஜாதாவின் கணேஷ்-வஸந்தின் விஞ்ஞான ஜோக்ஸும், சோ ராமசாமியின் அரசியல் நையாண்டிக் கட்டுரைகளும், சுப்புடுவின் சங்கீத அலசல்களையும், கிரேஸி மோகன் மற்றும் எஸ் வி சேகரின் சிரிப்பு வெடிகளும் குறிப்பிடத் தக்கவையாகும். இன்னும் எவ்வளவோ ஜாம்பவான்கள் இருக்கின்றனர்.
முத்தாய்ப்பாக வாகீச கலாநிதி கி.வா ஜகன்னாதன் அவர்கள் சிலேடைப் பேச்சிலிருந்து இரண்டுஅல்லது மூன்று உதாரணங்களைக் கொடுத்து என் இன்றைய இந்த நகைச்சுவை பற்றிய உரைக்கும் ஒரு நல்ல தரத்தை அளிக்க விரும்புகிறேன்.
சிறு குழந்தைக்கு அவள் தாய் உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தாள். ஏனோ குழந்தை அடம் பிடித்தது. “ஏன் உப்புமா தொண்டையில் குத்துகிறதோ என்று தாய் அதட்டினாள். கி வா.ஜ உப்புமாவை சாப்பிட்டுப் பார்த்து உப்புமா ஊசிப் போய் விட்டதால் குத்தத்தான் செய்யும் என்றார். அருகிலிருந்தவர்கள் அசந்து விட்டனர்.
சாப்பிடுவதில் தான் எத்தனை சிரிப்பு வகைகள்.
ஒருமுறை வாழையிலையில் சிவப்பு மிளகாய்ப் பொடிமற்று பச்சை சட்டினியுடனும் வெள்ளை இட்டிலியை வைத்ததற்கு “ஆஹா உங்கள் நாட்டுப் பற்று எம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது என்றாராம். கி. வா ஜ. மற்றொருமுறை பொங்கலுக்காக பரிமாறுபவன் நெய் ஊற்ற சிரமப்பட்டான். நெய் உருகாமல் இருந்ததால் இலையில் விழவில்லை. கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.
கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.
கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.
கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ உடனே“இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.
இம்மையோ மறுமையோ நகைச்சுவை உணர்விருந்தால் நம் கவலைச்சுமை கண்டிப்பாகக் குறையும்.