வெள்ளி, 18 நவம்பர், 2016

வள்ளி கல்யாணம் 
  

  நம் ஸநாதன தர்மம் (Sanatana Dharma) வேதங்களை அடிப்படையாகக் கொண்டு அதன் நெறியில் அறம், பொருள், இன்பம்,வீடு என்ற நான்கு பேறுகளையும் விரிவாக உணர்த்துகிறது.
 உபநிஷத்துக்கள் வேதங்களின் சாரத்தை வேதாந்தமாக எடுத்துரைக்கின்றன. ஆனால் இவையெல்லாம் கற்றறிந்த பண்டிதருக்கே உதவுகின்றன. சமுதாயத்தில் உள்ள பாமரர்களும் வேத நெறியில் செல்லவேண்டுமென்றால், உண்மையான மெய்ப்பொருளை அறியவேண்டுமென்றால் அவர்களுக்கு எளிதாகப் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும். தேனில் குழைத்து கொடுப்பதுபோல் புராணங்களின் மூலம் புகட்டினால் ஒவ்வொன்றின் தத்வார்த்ங்கள் புரியும்.

முருகன் வள்ளியை ஆட்கொள்ள வேண்டி பல திருவிளையாடல்களைப் புரிந்துள்ளான். பரமாத்மாவான முருகன் வலியச் சென்று ஜீவாத்மாவான வள்ளியை தனதாக்கிக் கொண்டதே இதன் தத்துவம்.

இது வள்ளியின் திருமணம் மட்டுமல்ல. நம் ஒவ்வொருவரின் திருமணமும் கூட. ஆண்டவனை அடையும் பொருட்டு ஒவ்வொரு ஜீவனும் கொண்டுள்ள ஏக்கத்தை பக்தி பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் பாடி, ஆடி, கசிந்து உருகி, ப்ரபஞ்சத்தின் ஒரே புருஷனாகிய ஸுப்ரமண்யனை (பரப்ரம்மத்தை) அடைவதே இந்த திருமணத்தின் நோக்கமாகும்.

அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
   ப்ரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பு (பரப்ரம்மம்)
   ஒரு மேனியாகி, முருகனாய் உலகமுய்ய உதித்தனன்.

ஆனால் வள்ளியோ உலகில் உள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் பிரதிநிதியாய் நிற்கிறாள். அவள் இச்சா சக்தியின் உருவகம். பரம்பொருளுக்கு எப்பொழுதுமே ஜீவன் மேல் கருணையுண்டு. ஒவ்வொரு ஜீவனும் பாச பந்தங்களுக்கு அப்பாற்பட்டு, பக்குவப்பட வேண்டிய தருணத்திற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்.

வள்ளி என்ற உருவகம் கொண்ட ஜீவாத்மாவை இப்பொழுது சந்திப்போம். அவள் பிறந்த குலம் வேடுவர் குலம். வேடுவர்கள். அற்றைக்கு இரை தேடுபவர்கள். அதாவது அன்றைய பசியைத் தீர்த்துக்கொள்பவர்கள். அவர்கள் அன்றாடத் தேவைகளை மட்டுமே கருத்தில் கொண்டவர்கள். இறைவனைப் பற்றி அறியாதவர்கள். அறிந்தாலும் இயற்கையினால் ஏற்படும் விபரீதத் தொல்லைகளிலிருந்து காப்பாற்றும் ஒரு  சக்தி என்று தான் புரிந்து கொண்டவர்கள். அரசனே தங்களைக் காக்கும் கடவுள் என்று நம்புவர்கள்.
அவர்களின் அரசனான நம்பி ராஜன் தன் மக்களை பாதுகாத்து வந்தான். அவன் திருமாலின் ஓர் அம்சமாகப் பிறந்தவன். முன்செய் நற்பயனாய் ஒரு பெண் முத்தை வள்ளிக்கிழங்கு செடியடியில் கண்டெடுத்து வளர்த்து வருகிறான்.
வள்ளி என்ற ஜீவன் மற்ற ஜீவன்களைவிட மேம்பட்டு இருக்கிறது. அவள் இறைவனைப் பற்றி தெரிந்து இருக்கிறாள், இன்னும் அறியவில்லை. நேரே காண விழைகிறாள். அற்றைக்கு மட்டுமே இரை தேடாமல் மறுமைக்கு முக்தியை தேடுகிறாள். அவள் மனம் முருக்னைச் சென்றடைந்து விட்டது. முக்தி ஒன்றே அவளின் குறிக்கோள்.
அஷ்டாங்க யோகம் மூலமாகப் பெரு முயற்சி செய்கிறாள். முதல் இரண்டு அங்கங்களான இயமம், நியமம் மூலம் உயிர் குடி கொண்டுள்ள உடலை கோவிலாக பேணுகிறாள். புற அழுக்குகள் படாமல் 'சிற்றேனல்' காக்கின்றாள்.  
இதற்காக யோகாசனம் பயில்கிறாள். 'ஆலோலம்' பாடி மகிழ்கிறாள். 'ஹம்ஸோஹம்' என்ற பிராணாயாம தியான வழிபாடு உதவுகிறது. சுவை, ஒலி, ஊரு, ஓசை நாற்றம் என்னும் பஞ்சேந்திரியங்களை வெளி விஷயங்களிருந்து தன்னை அப்புறப்படுத்துகிறாள். ப்ரத்தியாகாரம் என்னும் யோக வகையில் எதிர்மறைகளான கோபம் மற்றும் மத மாச்சரியங்களை (பொ: பகைமை, பொறாமை) அறவே நீக்குகிறாள்.
 இதையே 'குருவி ஓட்டித்' திரிந்த பெண்ணாக அருணகிரியார் காண்கிறார். 'தியானம்' மற்றும் 'தாரணை' மூலாமாக மனதை ஒருமுகப்படுத்தித் தவம் மேற்கொள்கிறாள்.
இவ்வளவு செய்தும் 'சமாதி' எனப்படும் எட்டாவது அங்கத்தில் பரப்ரம்மத்துடன் ஒன்றுவதற்குண்டான நிலை பெற அவளுடைய முயற்சி மட்டும் போதவில்லை.
அத்தருணத்தில் பரமாத்மாவான முருகன் அவளை ஆட்கொள்ள வருகிறான். முதலில் அவளை பரீட்சை செய்ய அவர்களில் ஒருவனான வேடுவனாக வந்து மணம் புரியக் கேட்கிறான். வள்ளி உலக வாழ்க்கையில் உழல மறுக்கிறாள். ஆனால் வந்தது பரப்ப்ரம்மம் என்று அறியவில்லை.
முருகன் வேங்கை மரமாக உரு எடுக்கிறான். அஞ்ஞான இருளை அகற்றி ஞானம் தரும் தருவாக நிற்கிறான். அப்பொழுது கிழவனாக (தலைவனாக) வந்து ஆச்ரயிக்கிறான். குருவாகி தீட்சை (தீக்கை) தந்து மும்மலங்களையும் இருவினையையும் போக்குகிறான்.
இப்பொழுது வள்ளி என்னும் ஜீவன், சத்தினிபாதத்திற்கு (பொ: மறைந்திருந்து அருள் பாலித்தல்) உரியவள் ஆகிறாள். ஓம்கார மந்திரத்தின் உட்பொருளை முருகன் உணர்த்துகிறான். ப்ரவணத்தின் நாயகனான விநாயகர், யானையின் உருவம் தாங்கி வருவது இதை குறிக்கிறது.
இவ்வாறு  பரமாத்ம - ஜீவ - ஸ்வருபஐக்யத்தை  உலகுக்கு உணர்த்துவதுதான் வள்ளி திருமணத்தின் உட்கருத்து.

சிவ யோகநிலையில் சித்திர தீபம் போன்ற அநுபூதி பெற அஷ்டாங்க யோகத்தை அருணகிரிநாதர், 'ஆசை நாலு சதுரக்கமல' என்ற பாடலில் எடுத்துரைக்கிறார். அவன் அருள் அல்லாது அதை அடைய முடியாது. ஆகவே நம் சார்பாக ஆண்டவனிடம் 'யோக பேத வகை எட்டும்' தந்தருள வேண்டுகிறார்.

   ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்திபெற
   மூலவாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர்
   யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய்
   காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர்புகழ் ...... தம்பிரானே.


வள்ளித் திருமணம்
 வளர்கிறது.

திங்கள், 23 மே, 2016

முத்தைத் தரு பத்தித் திருநகை

சொற்சித்திரம்

குருவருளின் மகிமை சொல்லில் அடங்காதது. குருவானவர் மௌனத்தினால் மானஸ தீட்சையும், கண்களால் நயன தீட்சையும், திருவடியால் ஸ்பரிச தீட்சையும் தருகிறார் என்று ஆன்றோர்கள் கூறுவார்கள். மானஸ தீட்சையின் போது  குருவாகவும், நயன தீட்சையின் போது தேசிகனாகவும், திருவடி தீட்சையின் போது ஆசார்யனாவாகும் விளங்குகிறார் என்றும் கூறுவது உண்டு. முத்தைப் போன்ற இந்த திருப்புகழில் சரவணபவன் அருணகிரிக்கு எல்லாமாகவும் இருக்கிறார். ‘முத்தைத்தரு’ என்ற சொல்லை உபதேசித்து, பின்னாளில் ‘வாக்குக்கோர் அருணகிரி’ என்று பெயரும் புகழும் நிலை பெறச் செய்யப் போகிறவர்.
இது ஒரு உபதேசத் திருப்புகழ் ஆதலால், சிவபெருமான் தனயனிடம் உபதேசம் பெற்ற நிகழ்வையே முதன் முதலாக பாடுகிறார். ‘உ’ பிரவண மந்திரத்தின் ஒரு எழுத்தின் காக்கும் எழுத்தாகும். ‘ம’ என்ற மெய்யெழுத்துடன் ‘உ’ என்ற பிரவண மந்திரத்தின் ஒரு பகுதியை இணத்து, உலகை யெல்லாம் காக்கும் கடவுள் (பெருமாள்) என்று குறிப்பால் உணர்த்துகிறார். மேலும் ‘தாயின் சிறந்ததொரு ‘கோயிலுமில்லை என்ற செம்மொழிக்கேற்ப முத்தமை என்ற தன் தாயின் பெயரையும் வைத்து ஆரம்பிக்கிறார். காக்கும் கடவுள் ஆனதால், கிரியா சக்தியின் மகத்துவம் விளங்க வேண்டும். ஆகையால் கிரியா சக்தியான தெய்வயானை அம்மையின் சிறப்புடன் முன் மொழிகிறார். என்றும் சொல்லலாம்.
முத்தைப் போன்று ஒளிகின்ற அளவான பல்வரிசை தெரிய இள நகை புரியும் தெய்வயானை அம்மையின் தலைவனே, சக்தி வேலாயுதம் தாங்கிய சரவணபவனே, மோட்சமாகிய வீட்டை அடைய மூலமாகி விளங்கும் குருபரனே என்று அழைக்கப்படுகிறார் பாட்டின் அடி எடுத்துக் கொடுத்தவர்.
அழைப்பவர் வேறு யாருமல்ல. சூரியன், சந்திரன், அக்கினியை மூன்று கண்களாகக் கொண்ட முக்கட் பரமன்தான்.. பரமசிவனுக்கு சரவணபவன் சுருதியின் முற்பட்டதும் வேதங்கட்கும் முன்பானதாக இருக்கும் ஒன்றை உபதேசிக்கிறார். மந்திர உபதேசம் என்பது குருவுக்கும் சாதகனுக்கும் இடையே இரகசியமாக இருப்பதாகும். அதனால் பிரவணத்தைச் சுருதியின் முற்பட்டது என்கிறார் (மற்றவர்களால் கேட்க முடியாதது என்றும் அர்த்தம் கொள்ளலாம்) அப்பேற்பட்ட ஒரு கடவுளை புகழாதவர்களும் உண்டோ?. பிரமனும், விஷ்ணுவும், முப்பத்து முக்கோடி தேவர்களும் கூட அடி பணிகின்றனர். 
அடுத்து வரும் சில அடிகளில் சூர ஸம்ஹாரத்தை லயமிக்க சந்தத்துடன் விவரிக்கிறார். சூரன் என்ற தத்துவம் இங்கே ஒர் உருவகம் மட்டுமே. கந்த புராணத்தில் மட்டுமில்லாது, பதினெண் புராணங்களிலும் பொதுவானதொரு அம்சம் தெய்வீக சக்தி அசுர சக்தியை வெல்வதுதான். அசுர சக்தி என்பது மனிதனை அவனிருக்கும் நிலையை விட கீழே கொண்டு செல்கிறது. அதை அழித்தால் மனிதன் தெய்வத் தன்மை அடைகிறான். இங்கு சூரன் என்ற அரக்கன் “நான்-எனது” என்ற மலங்களுக்குத் துணை செல்பவன். அவனைப் போன்ற அவுணகர்கள் நட்பு அற்றவர்கள். அன்பு என்றால் என்னது என்பதே தெரியாதவர்கள். க்ரௌஞ்ச மலையைப் போல் இறுகியவர்கள். உக்ர காளிக்கும், பேய்களுக்கும், கழுகளுக்கும் உணவாகப் போகிறவர்கள். அவர்களை அழித்தால்தான் மும்மலங்கள்  நீங்கிய மனத்தில் இறைவனின் உபதேசம் என்கின்ற மந்திரம் மனத்தை தூய்மையாக்கி தெய்வம் குடி கொள்ள ஏற்ற இடமாக மாறும்.
அவுணர்களை போர் செய்து அழித்த முருகன் மாமனாகிய ஸ்ரீமன் நாராயாணனுக்கு மிகப்பிரியமானவன். ( மெச்சத்தகு பொருள்). திருமாலின் மூன்று அவதாரங்களை மூன்றே வரிகளில் மிக அழகாகக் கூறுகிறார்.
பத்துத்தலை தத்தக்கணை தொடு – இது ஒரு வில்லால் இராவணனை வதைத்த இராமவதாரம்: வட இந்தியர்களால் “மரியாதா புருஷோத்தம்” என்று மிக்க மரியாதையுடன் அழைக்கப் படும் இராமனை “ஒரு இல், ஒரு வில் ஒரு சொல்” உடையவன் என்று கம்பன் விளித்தார்.  அருணகிரிநாதரும் ‘கணைகள்’ என்றல்லாமல்  கணை என்று குறிப்பிடுகிறார். அதாவது ஒரே கணையால் பத்துத் தலைகளையும் கொய்தவன் என்று பொருள். 
ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு - ஒப்பற்ற மந்தர மலையை மத்தாக்கிப் பாற்கடலைக் கடைந்த கூர்மாவதாரம்.
பட்டப்பகல் வட்டத்திகிரியில் இரவாக பத்தற்கிரதத்தைக் கடவிய - பகல் பொழுதை (சூரியனை) மறைத்து, இரவு ஆகச் செய்து, தன் பக்தனாகிய அருச்சுனனைக் காப்பாற்றி அவனுக்கு தேரையும் ஓட்டிய கிருஷ்ணாவதாரம். அந்த அவதாரம் செய்தவர்  பச்சைபுயல் மரகத வண்ணனான கண்ணன். இது ஒரு உபதேசத் திருப்புகழ் என்பதற்கேற்ப கண்ணனின் அவதாரத்தைப் பாடுகையில், அருணகிரிநாதர் நமக்கு உணர்த்தும் (மிக ஆழமாகப் பொதிந்துள்ள) பொருளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த புருஷோத்தமன் பத்தற்கு (அர்ச்சுனனுக்கு) இரதத்தைக் கடவிய போதுதான் பகவத் கீதை என்னும் பரம உபதேசத்தையும் அருளினான். வேதத்தை மறை என்றும் கூறுவார்கள். கண்ணன் அர்ச்சுனனுக்கு உபநிடத்தின் சாரமான கீதையை எடுத்துக் கூறினான் என்பதை இந்த வரியில் வெளிப்படையாகக் கூறாமல் மறைத்துக் கூறியுள்ள அருணகிரிநாதரின் கவித்துவத்தை என்னவென்று சொல்வது.!
திருமாலின் திருமருகனாம் முருகன் அன்புடன் ‘என் பக்கம் (பட்சத்துடன்) என்னை காத்து அருளும் நாளும் உளதோ?’ என இவ்வழகிய திருப்புகழை முடிக்கிறார்.
இவ்வழகிய திருப்புகழை நாம் வேறொரு கோணத்திலும் காணலாம். நினைந்து நினைந்து அகமகிழ வேண்டிய கருத்தாகும்.
கோயில்களில் எல்லாம், பிரதான கடவுளை விளிக்கும் பொழுது, தேவியின் பெயரை முதலில் சொல்லி அவளுடனுறை என்று தமிழிலோ அல்லது இன்னார் ஸமேத என்று ஸம்ஸ்க்ருதத்திலோ சொல்லக் கேட்டிருக்கிறோம். கேட்டிருக்கிறோம் என்ன, அதுதான் முறை, வழக்கமும் கூட. அருணகிரியார் இவ்வழக்கத்தை முறை பிறழாமல், “முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறையே” என்று, தெய்வயானை முன் வைத்து முருகனை அழைக்கிறார். அவள்தான் அவனுடைய சக்தி. அதாவது க்ரியா சக்தி.
மஹாவிஷ்ணுவின் கண்களிலிருந்து ஸுந்தரவல்லியுடன் தோன்றிய அமிர்தவல்லி பெயருக்கேற்ப, அமுதமுண்ட தேவர்கள் உறையும் இந்த்ரலோகத்தில் இந்திரனாலும் அவனுடைய யானையாகிய ஐராவதத்தாலும் முறையாக வளர்க்கப் பட்டவள். அவள் தேவ கன்னிகை. ஆக, சூரப்த்மனால் தேவர்கள் பட்ட கொடுமையை பக்கத்திலிருந்து பார்த்தவள். அதே சமயம் அத்தை மகன் ரத்தினத்தின் (வேறு யார்? நம் முருகன் தான்) மீது ஆராத காதல் கொண்டாள். அரசிளங்குமரி அல்லவா? அவளுக்கென்று ஒரு கவுரவம் அல்லது PROTOCAL உண்டே! ஆகவே சட்டென்று தன் காதலை வெளியிட முடியவில்லை. அத்தையின் சிபாரிசால், வேலாயுத்தில் தன் சக்தியெல்லாம் திரட்டி அவனிடம் கொடுக்கச் செய்தாள். சூரனைக் கொல்வதற்கு திரையின் பின்னால் இருந்து கொண்டு அவனுக்கு கிரியா ஊக்கி ஆனாள். அவுணரை ஸம்ஹரித்த பின்னர் முறையாக, இந்திரனால் தாரை வாக்கப்பட்டு வேத மந்த்ர கோஷங்களுடன் ஊரறிய உலகறிய ஸுப்ரஹ்மண்யனுக்கு தர்மபத்தினியானாள். எங்கேயும் எதிலும் அவள் பேசி நாம் கண்டதில்லை, கேட்டதில்லை. வட்டார வழக்கில் சொல்வ தென்றால், “இந்த சிறுக்கி அமுக்கமாக இருந்து, என்ன காரியம் பண்ணியது பாத்தீயகளா? அந்த ஆண்டிப் பயலையே வளைச்சு போட்டுகிடுச்சே” என்றுதான் கூற வேண்டும்.
ஹாஸ்யத்தை விட்டு மீண்டும் அருணகிரிக்கு வருவோம். முத்தைப் போன்ற பல்வரிசையில் நகையொளியை பரப்பும், அத்தி(யானை)யால்  வளர்க்கப்பட்ட தேவயானையின் தலைவனே என்று முதலடியில் முருகனை அழைக்கிறார். யானை என்று சொல்லும்போதே அண்ணனான யானைமுகனையும்  நாம் நினைவு கொள்கிறோம். எனினும் நம் ஒருமுனைப்பாடெல்லாம் தேவயானையிலேயே இருக்கிறது.
அவள் பல்வரிசை வெண்மையாக இருப்பது என்பது சத்வ குணத்தைக் குறிக்கிறது. முக்தியை விரும்பும் சாதகன் ஒருவன் மற்ற குணங்களை ஒழித்து சத்வகுணத்தில் நிலை கொள்ள வேண்டும்.
அவளுடை புன்முறுவல் பளீரென ஒளிவிடுகிறது. ஒளி உள்ள இடத்தில் இருளாகிய அஞ்ஞானத்திற்கு என்ன வேலை? ஆக, அவள் நம்மை சத்வகுணமுள்ளவர்களாக்கி அஞ்ஞானத்தை அகற்றுகிறாள் என்று கூறலாமா?
ஏனெனில், “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்பதற்கு முக்தியைத் தருவதான பக்தி நிறைந்த திருநகை என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா? அப்படிப்பட்ட பக்தியை, அன்பை, காதலை நமக்கும் அருளும் திருநகை என்று கூட விரித்துக் கொள்ளலாம். இவ்வாறு  நான் கூறவில்லை, ரா. கணபதி கூறுகிறார். 


      முத்தைத் தரு, ரா. கணபதி, வாக்குக்கோர் அருணகிரி, ஸுந்தரவல்லி, அமிர்தவல்லி

வியாழன், 19 மே, 2016

மணநாறு சீரடியே

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவல் மாற்றல் அரிது
தனக்கு  ஒப்பிடும்படி இல்லாத பரம் பொருளான இறைவன் தாள் அடிகளை நினைக்கின்றவர்கள் தவிர ஏனையோர்க்கெல்லாம் தங்கள் மனக்கவலை ஒழிப்பது அரிதான காரியம்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடி சேராதார்
இப்பிறவியாகிய மாயக்கடலை கடப்பதற்கு இறைவனின் திருவடிகளை பற்றியவர்களால்தான் முடியும். மற்றவர்களால் முடியாது.
குறிப்பிட்ட ஒரு சமயத்தைச் சாராமல் தமிழில் மாபெரும் மறை நூலாகவும் மனித இனத்துக்கே வாழ்வாங்கு வாழ ஒரு வழிகாட்டியாகவும் இருக்கின்ற திருக்குறள்தான் மேற்கண்டவாறு கூறுகிறது.
இப்படியிருக்க தமிழ் இலக்கியத்தின் கண்களாக விளங்குகின்ற சைவ வைணவ நூல்களெல்லாம் இறைவனின் பெருமையை தேனூரும் திருப்பாக்களில் வர்ணிப்பதில் வியப்பே இல்லை எனலாம்.
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
என்பதாகத்தானே திகட்டாத தீந்தமிழ் திருவாசகம் தொடங்குகிறது!. திருநல்லுரில் அப்பர் ஸ்வாமிகள் வேண்ட அவர் சிரத்தில் தன் திருவடியை சூட்டி (‘நனைந்தனைய திருவடி என்தலைமேல் வைத்தார்’) அவரை தடுத்தாட் கொண்டவர் இறைவன்.
பூ ஆர் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை! போக விடில்
மூவா முழுப்பழி மூடும்கண்டாய்
பூவார் அடிச்சுவடென் தலைமேற்பொ றித்தலுமே
       தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.  -திருவாசகம்
மேற்கூறிய மேற்கோள்கள் தமிழ் சைவ நன்நூல்கள் குறிக்கும் திருவடி பெருமைகளில் ‘ தினையளவு பிளவளவுதான்.
இன்னும் வைணவ நன்நூல்கள் யாவும் ‘வெள்ள வெளுக்க நிற்கும் நாராயணின் திருவடிகளின் மகிமையை உணர்த்தும் நூல்களாவே இருக்கின்றன. பெரியாழ்வார் திருவரங்க மங்களா சாசனம் செய்யும் போது காவிரித்  தென்னரங்கன் எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ் இணைபிரியாது இருப்பர்தாமே- 9-வது திருமொழி என துதிக்கின்றார்.
தொண்டர்களுக்கு இறைவனின் நாமமும் உருவமும் எவ்வளவு உயர்வோ அதைவிட பன்மடங்கு உயர்வாக அவர்கள் கருதுவது அவன் திருவடிகளைத்தான்.
சிவகுமாரனாம் திருமுருகனை சித்ர கவித்துவ, சத்த மிகுந்த திருப்புகழ் பாமாலையாலும், திருவகுப்புகளாலும், அலங்காரங்களாலும் ஆவலுடன் பாடி உள்ளம் உருகி, அழுது தொழுது நிஷ்களமான பதி பாவனையுற்று அநுபூதியில் அப்படியே அடைவித்து ஆறுமுகனால் ஆட்கொள்ள பெற்ற அருணகிரிநாதர், குமரனின் பாத பங்கயங்களைப் போற்றிப் புகழ்கிறார். முருகவேள் பன்னிருத் திருமுறையை கற்றோரும் மற்றோரும் படித்துச் சுவைத்து இசைபாடி இன்பம் துய்த்திருக்கிறார்கள்.
 அவ்வின்பத்தின் எழுத்து வடிவம்தான் வரவிருக்கும் கட்டுரை
“நின்னிற் சிறந்த நின் தாள் இணையவை திருவடியே வீடாயிருக்குமென்றார்”
என்பதற்கிணங்க “வரிசை தரும் பதம் அது பாடி வளமொடு
செந்தமிழ் உரைசெய்ய அன்பரு மகிழ  வரங்களும் அருள்வாயே” என்றும்
“நின்பதயு கப்ர சித்தி யென்பனவ குத்து ரைக்க நின்பணி தமிழ்த்ரயத்தை 
அருள்வாயே” ( தமிழ் த்ரயம் – முத்தமிழ்)
“நான் படும்பாடு தொலைத்துக் கழிக்க அக்ருபை தேடும் என்னை தற்புரக்க
உன் திரு பாதுகையைப் பற்றி நிற்க வைத்து எனை அருளாதோ”  என்றும் அருணகிரியார் வேண்டுகிறார்.
அவை எப்பேற்பட்ட திருவடிகள்!
தேவர் தலையிலும், குருநாதர் பாட்டிலும் பட்ட திருவடிகள் தினைப்புனத்திலும் திரிந்தனவாம். அவை ஒளியுடைய கோடி சூரியனை ஒத்த திருவடிகளாகும். அவை ‘பரிமள மதுகர வெகுவித மலரடிக’ளாம்.  அதனால்தான் ‘போது கங்கையின் நீர் சொரிந்து இருபாத பங்கையமே வணங்கி, இரவினிடை துயிலுகிலினும் கனவிலும் நனவிலும் மறவாமல் இருப்பதானால் மரணப்ரமாதம் நமக்கிலையாம் என முழங்குகிறார்.
குரு நாதருக்குத் தன் தேவனின் திருவடிகள் தான் எத்தனை எத்தனை விதங்களாக தோற்றமளிக்கின்றன! அவர் விவரிக்கும் உவமைகளை என்னவென்பது? உவமைகளுக்கு காளிதாஸன் மட்டும் தான் சொந்தம் கொண்டாட வேண்டுமா என்ன? சந்தமிகுந்த சொற்களால் ஆண்டவனின் பாதங்களை வர்ணிக்கும் பொழுது அச்சொற்களுக்கே ஒரு தனி அழகு அல்லவா வந்து விடுகிறது! அவற்றுள் சில பொறுக்கு மணிகள் இதோ
‘சுந்தர பொன்னிய பாதம்’, ‘சிவமான பதம்’, ‘சகலரும் மெச்சும் பரிமள பத்ம தருண பதம்’, ‘அருண ஒளி வீசு நளின இரு பாதம்’, ‘முடிவிலா திருவடி’, ‘தண்டைய பங்கயம்’, ‘வேதா முதல் விண்ணவர் சூடு மலர்ப் பாதம்’, ‘ஷடக்ஷரசூழ் பாதம்’, ‘உம்பர் தொழும் பாதம்’, ‘சேமகோமள பாத தாமரை’, ‘மெய்ப் பதமான  சேவடி’, ‘சோதி ஒளி பாதம்’, ‘அரிபிரமர் அளப்பரிய பத கமலம்’, ‘கோமளப் பதயுகள புண்டரீகம்’, ‘அற்புத சீர்பாதம்’, ‘சிவயோக பதம்’, ‘ரிபு தீர் உனதடி’. போறுமா?
முருகனின் திருவடிகள்  சிவபிரானாலும் வணங்கப்பட்டன என்று மகிழ்ந்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். கொன்றை மாலையணிந்த சிவபிரானின் சிரத்தை  திருவடியில் ஏற்றுக்கொண்டதால் அதன் பெருமையை என்னவென்பது!
           “ கொன்றை அணிந்த  சிரம் சரண அங்கிகாரா”  விஷப்பாம்புகளை அணிந்தவராம் சிவனின் ஜடாமுடியில் உள்ள அழகிய கொன்றை மற்றும் வாசமலர்கள் ஆறுமுகனின் திருவடிகளுக்கும் அழகு செய்கின்றனவாம்!
“கடுவுடையாரா நிரைத்த சடில முடி மீது வைத்த கடிய மலர்தரித்த கழல் வீரா”.
ஆதிநாதனாகிய சிவபிரான் ஸ்வாமிநாதனின் திருவடிகளளை பேணித் தொழுது நிற்கும் அழகு 
“தண்டையில் கழல் வேணித் தேவி பாகம் பெருந்தாதி நாதன் தொழும் தேசிகா”
என்பதிலிருந்து தெரிகின்றது.
“தோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமந்தியிரு காலால் எழுப்பி தசை கொண்டு மேய்ந்த” இந்த மனித உடலுக்கே “அரைவடங்கள் கட்டி, சதங்கை இடு குதம்பை பொற்சுட்டித் தண்டை” முதலிய அணிந்து அழகு பார்க்கிறோம். சுத்த நிர்குணமான பரிபூரணனோ ‘அருண கோடியினாரொளி வீசிய தருண வாண்முக’ மேனியனாய்  உருவெடுத்து வரும் பொழுது அவன் அணிந்திருக்கும் அணிகலங்கலங்கள் அவனால் அழகு பெருகின்றன. அப்பேற்பட்ட அழகன் தன் பாதங்களுக்கு அணிந்திருக்கும் நகைகளை அருணகிரிநாதர் ஞானகண்களால் கண்டு களிக்கின்றார். அவைகளை ‘செஞ்சதங்கை கொஞ்சு பிஞ்சு பாதம்’ முதல் ‘படி அதிர வீசி வரும் கழல் பாதம்’ வரை வர்ணித்திருக்கிறார். நாமும் நம் ஊணக்கண்களால் முடியாவிட்டாலும் மனக்கண்களால் காண முயலாம்.
‘தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண் கழல்’ சிலம்புடன் கூடிய பாதங்கள் கழல் பூட்டிய திருவடிகள், பொன்னையும் ரத்தனத்தையும் தனது ஒளியினால் வாட்டமுறச் செய்கின்றனவாம்.
‘கனக மணி வாட்டு மருவு கழல் பூட்டு கழலிணைகள்’
வேத மந்திரத்தை ஒலிக்கின்றனவாம்
‘செழுமறை அம்சொல் பரிபுர’
‘மறை சதுர்வித தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலரடி’
தாளத்துடன் ஒலிக்கும் அணிகலங்கள்,
‘தண்டை பொற்சித்ர விசித்ர தரு சதங்கை தொத்தொத்து முழங்கும் சரண கஞ்சத்திற் பொற்கழல் கட்டும் பெருமாள்’
‘இனிய நாதச் சிலம்பு புலம்பிடு அருண ஆடக கிண்கிணி’
என இசைபாடும் நூபுரங்களை அணிந்தவை அவை
‘கனக மணி வயிர நூபுராரிய கிரண் காரண அபிராம கோமள கமளயுகம்....’
‘ப்ரபை வீசும் தண்டைகள் கலின் கலின் கலினென,
கிண்கிணி கிணின், கிணின் கிணின், கிணினென
தண்கொலுசுடன் சிலம்பு அசைய இரு பரிமள
பங்கையப் பாதங்கள்’
‘தண்டையஞ்சிலம்பல வெண்டையஞ்சல்சலன்
சலலென்று சஞ்சிதஞ் சதங்கை’
அடியாரைக் காக்க ‘அஞ்சல் அஞ்சல்’
என்று ஒலிக்கின்றனவாம்.
இவைத் தவிர அவன் பாதங்களில் சேரும் மலர்களோ அழகுக்கு அழகு செய்கின்றன. அவன் திருவடியே தாமையாகிய புஷ்பம். அவற்றைச் சுற்றி, அன்றாடம் பக்தர் குழாம் சொரியும் மலர்கள் குவிந்துடும். அவைகளில் ஊரும் தேனுக்காக வண்டுகள் ரீங்கரமிட்டு ஸ்ரீ ராகம் சீராக ஓதுகின்றனவாம்.
“சீராக மோது நீப பரிமள இருதாளும்”.
நன் மலர்களைக் கொண்டு வரும் பக்தர்கள் இறைவனது பாத திருவடிகளைக் கண்டு அவை அன்றலர்ந்த மலரோ என்று வியப்புருகின்றராம்.
“சீதாள மாமலர் தொடுத்த பக்தர்கள் சீராடி நாண் மலர் எனப் பிரியப் படிசீர் பாத’.
அம்மலர்களில் சிலவற்றை பார்க்கலாமா?

குராமலர், விளாமரத்தின் இளம் தளிர்கள், கடப்பமலர், மகிழம்பூ, முல்லை, குவளை, வெட்சி மலர். அருகம்புல், கரந்தை முதலிய பச்சிலைகளும் முருகனின் திருவடியை அணுகும் பேறு பெற்றிருக்கின்றன.
திருவடியின் பெருமை
திருவடியின் தூசியானது பூமியில் உள்ள மலைகள் ஆகும். ‘உனது பததூள் புவனகிரிதான்’. திருமால், பிரம்மா, தேவர்கள் எல்லோரும் கூட அறிய முடியாத பெருமை வாய்ந்த திருவடிகள்.
“அரிய சமய ஒரு கோடி அமரர் சரணர் சத கோடி
அரியும் அயனும் ஒரு கோடி இவர் கூடி
அறிய அறிய அறியாத அடிகள்”
“ஆலமுண்ட கோன் அகண்ட லோகமும்
உண்ட மால் விரிஞசன் ஆரணங்கள்
ஆகமங்கள் புகழ் தாள்”
வேதங்கள் போற்றுதற்கு அரிதான ஒளியாக விரிந்துள்ள மலரடியாகிய தாமரை
“மறை போற்றரிய ஒளியாய்ப் பரவு மலர் தாட் கமலம்”
தூய்ந்த அன்பர்களின் நாவினால் தொடுக்கின்ற பாடல்களின் மணம் வீசுகின்ற பாதரவிந்தம்
“நாவேறு பாமணத்த பாதாரம்”
தேன் நிரம்பிய மலர் நிறைந்தும் மோன வழியை திறந்து காட்டின தாமரை போன்றது.
“நறை விழாத மலர் உகந்த அரியமோன வழி திறந்த நளின பாதம்”
திருவடியை அணுகும் முறை:
முருகனின் திருவடிகளை துதிப்பதற்கான வழியை அருணகிரிநாதரே நமக்கு சொல்கிறார். சிலம்பணிந்த திருவடிகளை நாள்தோறும் நித்தம் நினைக்க வேண்டும்.
“நாத சதகோடி மறை ஓலமிடு நூபுர உனது
பாத தாமரை நலமாக நான் அனுதினா தினமே”
அன்புடன் தினந்தோறும் திருவடியை (அதன் பெருமைகளைப்) பயம் இல்லாமல் தைரியத்துடன் ஓத வேண்டும்.
“நேசமாய் நித்தம் நிற்றாளை  நீளச்சமற்று ஓத”
அழகிய சொற்களால் அமைந்த பாடல்களால் திருவடிகளை பாடித் தொழ வேண்டும்.
“சொற்கோலத்தே நற்காலைச் சேவிப்பார்”
அழகிய பாத தாமரைகளை நெஞ்சில் நிறுத்தி அவன் புகழ் கூறும் திருப்புகழ் பாடல்களை நெஞ்சில் நிறுத்தி அவன் புகழ் கூறும் திருப்புகழ் பாடல்களை தினந்தோறும் பாடவேண்டும்.
“பாத பங்கய உற்றிட உட்கொண்டு ஓதுகின்ற திருப்புகழ் நித்தம் பாடு...”
திருவடிகளின் அழகே நமக்குப் பற்றுக் கோடாகும் என்று உணர்ந்து ( மானிடர்களாகிய நாம்) தேவர்களைப் போல தொண்டுற வேண்டும்.
“அருண மணி வெயிலிலரு தண்டையம் பங்கயங்
கருணை பொழி கழலி லந்தமுந் தம்பமென”
“அழகு பெற தெறிவருடி அண்டருந் தொண்டுறு..”
பக்தியுடன் மனம் உருகி நாள்தோறும் திருவடிகளைப் பற்ற வேண்டும்.
“பக்தியுடன் உருகி நித்தம் உனதடிகள் பற்று அருள்”
“நித்த நினதாளில் வைத்ததொரு காதல்
நிற்கும் வகை ஓத...அருள்வாயே. என்றும் பாடுகிறார் அருணகிரியார்.              
இது போன்று அவர் இயற்றியுள்ள மொத்தப் பாடல்களில் முக்கலே மூணு வீசம் பாடல்களில் அவன் பாதங்களின் மகிமை பாடியும் அவர் மனம் அலுக்கவில்லை போலும். தான் பாடிய வகுப்புகளிலும் முருகனின் பாதங்களுக்குத் தனிச் சிறப்பு சேர்த்து “சீர் பாத வகுப்பு” என்ற அற்புதமானதோர் பாமாலைத் தொடுத்துள்ளார்.
’தனதனன’ என்ற சீரான சந்தத்தில் முப்பத்திரண்டு வரிகளில் இயற்றியுள்ள இவ்வகுப்பு, அவனுடை பாதங்களின் மேன்மையை வெவ்வேறு கோணங்களில் எடுத்துரைக்கிறார். சில வரிகளைப் படித்து அத்தமிழைச் சுவைத்து, அவை எடுத்துரைக்கும் எம்பெருமானின்  சரணகமல்ங்களின் மேன்மையை உணர்ந்து ஆண்டவனின் பாதமலர் மீது போத மலர் தூவித் துதிப்போமாக.
உததியிடை கடவுமர கதவருண குலதுரக வுபலளித கனகரத ...... சதகோடி சூரியர்கள்
உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை யுகமுடிவின் இருளகல ...... ஒருசோதி வீசுவதும்
முருகசர வணமகளிர் அறுவர்முலை நுகருமறு முககுமர சரணமென ...... அருள்பாடி யாடிமிக
மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழியருவி முழுகுவதும் வருகவென ...... அறைகூவி யாளுவதும்
முடியவழி வழியடிமை யெனுமுரிமை யடிமைமுழு துலகறிய மழலைமொழி ...... கொடுபாடும் ஆசுகவி
முதலமொழி வனநிபுண மதுபமுக ரிதமவுன முகுளபரி மளநிகில ...... கவிமாலை சூடுவதும்
மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென
வருகருணை வரதனிகல் இரணியனை நுதியுகிரின் வகிருமட லரிவடிவு ...... குறளாகி மாபலியை
வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடியவளருமுகில் நிருதனிரு ...... பதுவாகு பூதரமும்
மகுடமொரு பதுமுறிய அடுபகழி விடுகுரிசில்மருகனிசி சரர்தளமும் ...... வருதார காசுரனும்
மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி மறுகிமுறை யிடமுனியும் ...... வடிவேல னீலகிரி
மருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுர வசனிபயி ரவிகவுரி ...... யுமையாள்த்ரி சூலதரி
வநசைமது பதியமலை விசயைதிரி புரைபுநிதை வநிதையபி நவையநகை ...... யபிராம நாயகிதன்
மதலைமலை கிழவனநு பவனபய னுபயசதுர் மறையின்முதல் நடுமுடிவின் ...... மணநாறு சீறடியே

புதன், 18 மே, 2016

முருகனுக்கு உகந்த மலர்கள்



மலர் அழகானது; மலர் மிருதுவானது; மலர் மென்மையானது; மலர் மேன்மை மிக்கது; மலர் அமிர்தமயமானது; மலர் குளிர்ச்சியானது: மலர் தன்னையே தரும் வள்ளல்; மலர் எதையும் எதிர்பார்க்காதது; அதன் மணம் அதற்குச் சொந்தம் இல்லை; எனினும் யாரிடமும் கோள் சொல்வதில்லை; மலருக்கு ஒர் உருவம் உண்டு, ஆனாலும் அதன் மணம் அருவமான ஓர் இதத்தைத் தருவது; ஆதாரமாக (ஸத்தாக)இருக்கக் கூடிய தண்டிலிருந்து பிரிந்து சூரியசக்தியை உணவாக்கிக் கொடுக்கும் (சித்சக்தியான) இலைகளின் ஊடே மலரும் மலர்கள் ஆனந்தத்தின் இருப்பிடம்.
முருகன் அழகானவன்; முருகன் மிருதுவானவன்; முருகன் அடியவருக்கு மென்மையானவன்; முருகன் அமிர்தமயமானவன்; முருகன் சீதளமானவன்; முருகன் தன்னையே தரும் வள்ளல்; யாரிடமும் கோபம் கொள்ளத் தெரியாதவன். மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத அன்பே உருவானவன்; முருகனுக்கும்  உருவம் உண்டு எனினும் அவன் தண்ணருளால் அருவமாக இருந்து கொண்டு பக்தர்களுக்கு இதத்தை அளிப்பவன்; ஸத்தான ஸ்தாணுவாக இருக்கக் கூடிய பரமசிவனுக்கும் அபர்ணாவாகச் சுற்றிப் படர்ந்திருக்கும் பார்வதிக்கும் இடையே உதித்த விசாகன் அவன். ஸத்தான பரப்ரம்மத்தில் சிச்சக்தியின் ஸ்பந்தத்தினால் ஏற்பட்ட ஆனந்தமே அவன். ஆகவே முருகன் ஆனந்தத்தின் இருப்பிடமானவன். ஆக முருகனும் மலரும் ஒன்றே என்று கூறலாமா? அதிலென்ன சந்தேகம்?
கடவுள், தான் எல்லா இடத்திலும் ஒரே சமயத்தில் இருக்க முடியாது என்று தான் ஒவ்வொருவருக்கும் ஒரு தாயைப் படைத்தான் என்று ஓர் ஆங்கிலக் கவிஞன் கூறினான். இயற்கை அன்னையோ, அதே கடவுளை, என் படைப்பினில் கணக்கில் அடங்காத வண்ண வண்ண மலர்களில் கண்டு களித்து ஆனந்தமடையுங்கள் என்று கூறாமல் கூறுகிறாள். உண்மை தான். ஒரு கணத்திற்கேனும் மலர் இல்லாத ஆண்டவனின் சன்னிதானத்தையோ, தேரில் பவனி வரும் ஓர் உற்சவரையோ, கெட்டிமேளம் கொட்டும் ஒரு கல்யாணக் கூட்டத்தையோ, ஏன் பகுத்தறிவாளர்களின் விழாவையோ கூட நம்மால் சிந்திக்க முடியுமா?
தாங்கள் எங்கிருந்தாலும் அந்த இடத்திற்கு ஒரு தெய்வீகத்தன்மையையும் சுகந்தத்தையும், மகிழ்ச்சியையும், புத்துணர்வையும்  தரும் மலர்கள், தாங்களே ஒரு மனத்தைக் கவரும் காட்சிப் பொருளாகி மோனத்தில் ஆழ்ந்து விடுகின்றன. அதுவும் ஆண்டவனின் திருவுருவத்தை அழகு செய்யும் மலர்கள் மோனத் தவத்திலேயே மூழ்கி விடுகின்றன என்றே கூறலாம்.
எனவே இறை வழிபாட்டினில் மலர்களின் பங்கையோ சிறப்பையோ எடுத்துக் கூற பட்டிமன்றம் ஒன்றும் தேவையே இல்லை. இறைவனுக்கு மலர்களை ஏன் சமர்ப்பிக்கின்றோம்? நமக்கு  தகைமை உள்ளதோ இல்லயோ, அருளையும் பொருளையும் வாரி வழங்கும் வள்ளலுக்கு நம்முடைய நன்றியின் அடையாளமாக ஏதேனும் கொடுக்க ஆசைப் படுகின்றோம். அவனுக்கென்று கொடுக்கக் கூடிய பொருள் அவனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ‘பத்ரம், புஷ்பம், பலம், தோயம், யோ மே பக்த்யா ப்ரயச்சதி’ என்றான் கீதாசாரியன்.
பக்தியுடன் எதைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வான் என்றாலும், பூவினால் அர்ச்சித்தால், அவன் மனம் மேலும் மகிழ்ச்சி அடையும். ஏனெனில், மலரும் ஆண்டவனும் ஒன்றே. அதாவது, அவனுடைய சிறப்புத் தன்மையும், பூவின் சிறப்புத்தன்மையும் ஒன்றே. எனவேதான் இக்கட்டுரையை முருகனும் மலரும் ஒன்றே என்ற கூற்றுடன் தொடங்கினோம். அவனுக்கு கொடுக்க வேண்டிய பொருள் அவனை விட வேறான தகுதி உள்ளதாய் இருக்கலாகாதல்லவா?
அவன் பாதங்கள் மலர்களைப் போன்றவை. அவன் அருட் கரங்களும் மலர்களைப் போன்றவையே. அவனுடைய முகமும் மலர் போன்றதே. ஆலிலையில் துயிலும் அந்தக் கார்மேனியனாம் கண்ணனை “கராரவிந்தேன பதாரவிந்தம், முகாரவிந்தே வினிவேஶயந்தம்”: அதாவது கைத் தாமரையினால் பாதத் தாமரையை, வாய் என்ற தாமரையில் வைத்து அழகாக மோன நித்திரையில் உள்ள முகுந்தனே என்று முகுந்தாஷ்டகத்தில் பாடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் பார்க்கின்ற மலர்களில் எல்லாம் ஆண்டவனின் திருவுருவத்தைக் காண்பதால் அவைகளைப் பறிக்க மனமின்றி பின் வாங்கி விடுகிறார் தாயுமானவர். “.....பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப் பனிமல ரெடுக்க மனமும் நண்ணேன்...” என்று பாடுகிறார். இருந்த போதிலும் சில நாட்களுக்குள் வாடப் போகும் மலர்களை எடுத்து இறைவனுக்குக் சமர்ப்பிப்பதில் தவறேதும் இல்லையாததால் பூவினால் வழிபாடு செய்வது என்பது தொன்று தொட்டு வரும் வழக்கமாகி இருக்கிறது. அதனாலேயே, மலர்களைக் கொய்வதில் கூட சில வழிமுறைகளை வகுத்திருக்கின்றனர் நம் முன்னோர்.
ஒரு பூவின் பருவ வேறுபாடுகளுக்கேற்ப அவற்றை, அரும்பு, மொட்டு, போது, மலர், அலர்  என ஐந்து வகையாக பிரிக்கப் படுகின்றன. பூவின் கனிந்த யௌவனப் பருவமே மலராகும். வண்டுகள் வந்து தேனையும் பூந்தாதினையும் எடுக்க மலர்களை வட்டமிடும் பருவம் இது. இந்த நிலையில் தான் அவைகள் பூசனை செய்ய ஏற்றவையாக இருக்கின்றன. முருகனின் நீப மாலையில் வண்டுகள் வரிசையில் சீராக வந்து ராகம் பாடுவது போலுள்ளது என்கிறார் அருணகிரிநாதர். “..... நீளும் வரியளி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும்.....”
(சீரான கோல கால)
புஷ்பங்களுக்கும் மூன்று வகையான குணங்கள் இருக்கின்றன என்று ஆன்றோர் கூறுவர். வெள்ளை நிறத்தவை சத்வ குணத்தைக் கொண்டவை. இராஜஸ குணம் கொண்ட மலர்கள் சிவப்பு நிறமானவை. தாமஸ குணம் உடையவை நீல நிறமாக இருக்கும். மஞ்சள் நிறமான மலர்கள் எல்லா குணங்களையும் பெற்றிருக்கும். இதைத் தவிர பிரத்தியேகமாக சில மலர்களுக்கு சில விசேஷமான குணங்கள் இருப்பதாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர். இவற்றை மலரின் ஆன்மீக மகத்துவம் என்றும் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு, தாமரை மலர் திருஉருவ வழிபாட்டிலும் சரி, ஆன்மீகத்திலும் தனியிடம் பெற்றிருக்கிறது. வெண்தாமரை ஸத்துவ குணத்தின் குறியீடாகும். கமலமே உலகில் உதித்த முதல் மலர் என்று கூறுபவரும் உண்டு. எந்த மென்மையன பொருளுக்கும் தாமரை என்ற அடைமொழி கொடுத்து அழைப்பது வழக்கம். இதயக்கமலம், பாதத்தாமரை, முக கமலம் என்றெல்லாம் ஏற்றம் கொடுக்கிறோம். தாமரையை ஏன் இவ்வளவு சிறப்பித்துக் கூறுகிறோம் என்றால் அதனுடைய பிறப்பிடம் அப்படி. பொதுவாக கமல மலர்கள் சேற்றில் தான் உதிக்கின்றன. ஆனாலும் தண்ணீர் மட்டத்துக்கு மேலெழுந்து நிற்கின்றன. அதாவது இந்த ஜீவாத்மா விவகாரமான உலகத்தில் பிறந்தாலும், அவைகளிலிருந்து மேலெழும்பி ஆண்டவனை நாட வேண்டும் என்பதே. தாமரை இலைத் தண்ணிரைப் போன்று இவ்வுலகத்தில் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதே. தாமரை எப்பொழுதும் சூரியனைப் பார்த்துக் கொண்டே இருப்பது போன்று, நம் அகத்தின் முகமும் ஞான சூரியனான கந்தனை நோக்கியே இருக்க வேண்டும் என்பதே. இவைகளெல்லாம் இந்த மலரிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் ஆன்மிக போதனை களாகும். தாமரை மலருக்கு வேறு பல சிறப்புகளும் உண்டு. ஆனால் இவற்றை விவரிக்க இக்கட்டுரை போதாது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இந்த தெய்வீக மலர் முருகனுக்கு உகந்த மலர் என்பதில் என்ன சங்கை இருக்க முடியும்? முருகனின் ஆறுமுகங்களையும் ‘கமலமுகங்கள்’ என்றும், ‘கருணைபொழி கமலமுகம் ஆறும்’ என்றும் அருணகிரிநாதர் வர்ணிக்கின்றார். அவன் பாதங்களும் தாமரைகள் தான். “சேமக் கோமள பாதத் தாமரை சேர்தற்கு ஓதும் அனந்த வேதா” என்று பாதங்களின் புகழ் பாடுகின்றார். ‘குரவு, செக்சை, வெண்முளரி புத்தலர்குவளை முற்று அணி மார்பா”, ‘கஞ்சமலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே” என்ற அருணகிரிநாதரின் வாக்கிலிருந்து தாமரை முருகனுக்கு உகந்த மலர் என அறியலாம்.
அடுத்து, கொன்றை மலரைக் காண்போமா?
கொன்றை மலர், சிவபெருமானுக்கே உரிய மலர் என்றாலும் அவன் அருமை மைந்தனான ஆறுமுகனுக்கும் உகந்ததொன்றாகும். கொன்றை மலரை பிரணவ மலர் என்று கூறுவதும் உண்டு. ஐந்து இதழ்களி உடையதால் புனிதமான ஐந்தெழுத்தையும் அது குறிக்கும். ஐந்தெழுத்தோடு பிரணவத்தைச் சேர்த்தால், ஆறெழுத்து மந்திரம் உண்டாகும் அது கந்த வேளுக்கு உரியதாகும். கொன்றை மலரில் மத்தியில் கிரந்தத்தில் பிரணவம் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி கோசரம் (பூந்தாது) இருக்கிறது. ஆகையால் கொன்றை முருகனுக்கு உகந்த மலராகும். ‘சஞ்சரியுகந்து’ என்ற திருப்புகழில், “கொன்றை தும்பை மகிழ விஞ்சி கந்தி கமழ்கின்ற பெருமாளே” என்று கந்தனை விளிக்கின்றார் அருணகிரிநாதர்.
குரா மரமும் அதன் மலரும் முருகனுடன் விசேடமான தொடர்புடையவை. குராமலரும் தெய்வீகத்தன்மை உடையதால், அதனைத் ‘திருக்குரா’ என்றே கூறுகிறார்கள். தாமரையைப் போன்றே திருக்குராவும் எல்லா தெய்வங்களுக்கும் விருப்பமான மலர் என்றாலும், ஏனோ தாமரையைப் போன்று தாராளமாகக்  கிடைப்பது இல்லை. பெரும்பாலோர் இதை அறிந்ததுமில்லை. முருகப்பெருமான், குராமரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு, குரர மலரை தன் மார்பிலும், தோளிலும் பாதத்திலும் அணிந்து கொண்டு இருக்கிறான்.  குராமலரில் முருகனின் பாதங்கள் மறைந்திருக்கிறது என்பது, ‘குராக்கொளிரு கழல் தாராய்’ என்ற அருணகிரிநாதர் அடிகளிலிருந்து தெரிகிறது.  திருவிடைக்கழியில், குராவடிக் குமரனை, பலவாறாகவும்பாடி இருக்கிறார். அவர் இயற்றியுள்ள நூல்களாகிய, திருப்புகழிலும், அலங்காரத்திலும், அநுபூதியிலும் வகுப்புகளிலும் குராவைப் பற்றின குறிப்புகள் வருகின்றன.
“திருக்குராவடி நிழல்தனில் உலவிய பெருமாளே”, “குராப்புனை தண்டையந்தாள் தொழல் வேண்டும்”, “அருணை நகருறை சரவண குரவணி புயவேளே”, “குரவும் அறுகும் குறுந் தும்பையுங் கொன்றையுங் கமழ் சடில. .” என்பன அருணகிரியாரின் வாக்குகள். ‘குரவணி பாதம் பணிவோர்க்கு இனிமை கொடுக்கும் பிரான்’ சிதம்பர சுவாமிகள் போற்றியிருக்கிறார். “கோடலும் மராத்தொடு குரவுந் செச்சையுஞ் சூடிய குமர” என்கிறார் கச்சியப்பர்.  சாதுராம் ஸ்வாமிகளோ “கோகலி குராகுவளை கூதாளம தாலமலர் கோகனம் வாகையணி மணிமார்பா” என்றும், “ குரவொடு நீபமலர் அறுகுதமை அணிதருவது” என்றும் பாடியிருக்கிறார். சிதம்பரம் முனிவர் “சரவணபவணே குரவணிதரு சண்முகனே தாலேலோ”, என்று பாடி ஆனந்திகிறார்.
 அடுத்தும் முருகனுக்குப் பிடித்த மலர் கடம்பு அல்லது கடப்ப மலர் ஆகும். குரா மலருக்கு நிகராக, முருகனை கடப்ப மலர் மாலையால் அழகு பெற்று விளங்குவதை அருணகிரியார் பாடிப் பாடி மகிழ்கிறார். “கடிமாமலர்க்குள் இன்பமுளவேரி கக்கு நண்பு தருமா கடப்பமைந்த தொடை மாலை கன மேரு ஒத்திரும் பன்னிரு மா புயத்தணிந்த கருணாகரா”. கடப்ப மாலையின் பெருமையை வானளாவப் புகழ்கிறார். மிகச் சிறந்த மணங்கமழும் பெரிய கடப்ப மலர்களை மாலைகளாகத் தொடுத்த பெரிய மாலைகலைத் தன் பன்னிரு புயங்களிலும் அணிந்து கொண்டிருக்கும் முருகனை, அந்த மலர்களால் அர்ச்சித்தால் அவன் நட்பு நிரந்தரமாகக் கிடைக்கும் என்கிறார் சந்தப் புலவர். கடப்ப மலர் போகத்தைக் குறிக்குமாதலால் பூசனையில் இம்மலர்கள் இருந்தால், அவன் சகல செல்வ யோகமும் தருவானன்றோ! நீப மலரும் கடம்பையே குறிக்கும். ‘இந்துளந் தொடைமகுட’, ‘கடம்புடன் சந்த மகுடங்களும்’ என முருகன் கடப்ப மலர் அணிந்திருப்பதை திருப்புகழ் தெரிவிக்கிறது.
முருகன் அடியார்க்கு எளியவன் என்றாலும் இடர் கொடுக்கும் அசுரரை வெல்லும் பொழுது அவன் தேவர்களின் சேனைக்கு அதிபதி ஆகிறான். அப்பொழுது அவன் வீரத்திற்கு இலக்கணமாகத் திகழ்கிறான். அவ்வமயம் அவன் விரும்பி அணிந்து கொள்வது வெட்சி மாலையாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் வெட்சிப் பூ வீரத்தின் அறிகுறி என்பர். செங்காந்தள் மலரும் தீரத்தின் நிலைப்பாடே. ரத்தம் போன்ற சிவப்பு நிறம் கொண்டது, மேலும் கோழிக் கொண்டை போன்றும் இருக்கும். ‘செச்சை பிச்சி மாலை மார்ப’, என்பார் சந்தப்புலவர்.
போருக்குப் பின் வருவது அமைதி அல்லவா? சச்சரவின்மையைக் கொடுக்கும் வெண்காந்தள் மலரும் அவனுக்குப் பிடித்த மலரே. இதை கார்த்திகைப் பூ என்றும் கோடற்பூ என்றும் கூறுவார்கள். (கோடற்பூ முட்டடாதிட்ட- திருப்புகழ்) பெயருக்கேற்ப “கரும்பு மூசாச் சுடர் பூங்காந்தள், பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்” என்று திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டிருக்கிறது.
நம்மனத்தை அள்ளும் குவளையும் அவன் மனதிற்குப் பிடித்ததொன்றாகும்.
“...எப்பொழுதும் வந்திக்கைக்கு அற்ற அணைப்பின்
பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும்
பொறையை என் செப்பி செப்புவது ஒப்புவது ஒன்று உளதோ தான்”.
வணங்காமுடியாக இருக்கும் என் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் பொறுமையுடன் என்னை மாற்றி உன் பக்தருள் என்னை ஒருவனாகச் செய்த உன் பொறுமையை எவ்வாறு புகழ்வது என்று கேட்கிறார், அருணகிரியார். அத்தகைய பொறுமை எனும் அணிகலனை அணிந்துள்ள முருகன் மகிழம்பு மாலையை புனைந்து கொண்டிருக்கிறான். மகிழம்பூ பொறுமையின் தனிச் சிறப்பைக் கொடுக்க வல்லது. அவன் விரும்பி அணிவதால், அவனிடமிருந்தே பொறுமையைக் கற்றுக் கொண்டிருக்கிறதோ?
வண்ண  வண்ண மாலைகளின் நடுவே ஒரு மாறுதலுக்கு கரும் பச்சை வண்ணத்தில் திருநீற்றுப் பச்சையை அணிந்திருக்கிறான் நம் மனதிற்குகந்த முருகன். பச்சை வண்ண இலை மாலை, கண்ணிற்கு குளிர்ச்சி தருவது மட்டுமல்ல; ஒருவித கட்டுப்பாடையும் தருகிறது. மனம் தறிகெட்டுப் போகாமல் திருநீற்றுப்பச்சை எண்ணங்களை ஒருமுகப் படுத்தி கண்ணியத்தையும் தருகிறது.
 கந்தன் தன் தந்தையைப் போலவே தும்பையை விரும்புகிறான். ஏன் தெரியுமா? அது சத்துவ குணம் நிறைந்தது, மனதைப் பால் போல் தூய்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. முருகன் வாரி வழங்கும் வள்ளல்; காசித்தும்பை பூக்களால் அர்ச்சித்தால், அவைகளுடைய உதார குணம் போலவே, நமக்கும் அருளையும் பொருளையும் அளவில்லாமல் கொடுப்பான்.
செண்பகப் பூக்களும், மந்தாரை மலர்களும், உள்ளுணர்வின் தெய்வத்தன்மையை வெளிக் கொணரும் ஆற்றலைப் பெற்றுள்ளன. இவை களையும் தொடுத்தணியும் மார்பினன் மால் மருகனான முருகன். சத்துவ குணத்தின் பிரதிநிதிகளாக விளங்கும் முல்லையும் மல்லிகையும், சம்பங்கியும். அல்லியும், தெளிவான மனத்தைக் கொடுக்கும் மனோரஞ்சிதமும் சிறுசெண்பகமும் முருகனுக்கு உகந்த மலர்களே.
வள்ளி முருகனிடம் மையல் கொள்கிறாள். கந்தனும் வேடவனாகவும் வேங்கையாகவும் பின் கிழவனாகவும் வந்து அவளை அலைக் கழிக்கின்றான். அண்ணனின் துணையுடன் அவர்களுள் சமரசம் நிகழ்கிறது. எள்ளுப் பூ மிக அழகானது; அது சமரசத்தின் சின்னம். முருகன் வள்ளியின் மூக்கை எள்ளுப்பூ என்று வர்ணிக்கின்றான். ஆகையால் எள்ளுப்பூவும் முருகனுக்குப் பிடித்ததே. இதை அருணகிரியின் கந்தர் அந்தாதியில் காண்கின்றோம். “செம் திலகத்து அலர் வாள் நுதல் வேடிச்சி முக  பங்கசெம் திலகத்து அலர் துண்டம் என்னா நின்ற சேயே....” ‘வள்ளி நாயகியின் முகத்தைத் தாமரை என்றும், மூக்கை எள்ளுப் பூ என்றும் வியக்கும் குமாரக் கடவுளே’ என்கிறார் அருணகிரிநாதர்.
எத்தனை தான் ஏற்றம் இருப்பினும் மலர்கள் ஒருநாள் பொழுது இருந்து வாடுபவையே. அவன் பாதத் தாமரையோ என்றுமே வாடாத மலர். அந்த வாடாத மலரை நம் சென்னியில் சூடிக் கொள்ள வேண்டுமென்றால் நாமும் அவனுக்கு ஒரு வாடாத மலரைச் சாற்ற வேண்டும். அது தான் பக்தி எனும் மலர். தூலமான பொருளில் மலர்கள் இல்லாமலே கூட பக்தியால் அவனை அர்ச்சிக்க முடியும்.  பக்தியே இல்லாமல் டாம்பீகமாக பல மலர்களை அர்ச்சித்தாலும் ஒரு பயனும் இல்லை. (ஆராதனர் ஆடம்பரத்து - திருப்புகழ்). மன்மதன் சிவனை மலர் அம்புகளை ஏவினான். அவைகளை பரமசிவனின் பாதங்களில் அன்பு பூண்டு சமர்ப்பிக்கவில்லை. விளைவு? மன்மதன் எரிந்து சாம்பலானான். பின் எப்படி பக்தி எனும் மலரை சமர்ப்பிப்பது? அருணகிரியே அதற்கான விடையும் அளித்து இருக்கிறார்.
அருணகிரிநாதர் அணிவிப்பது மாத்ருகா புஷ்ப மாலை. அதை ஆசைகூர்ந்து அணிவிக்கிறார். மனோபத்மமான பூக்கள் தான் தொடுக்கப் பட்டு இருக்கின்றன. அவைகளை ‘அன்பு’ எனும் நாரினால் தொடுத்திருக்கிறார். அவை மிக அழகாகத் தொடுக்கப் பட்ட இடம் எது தெரியுமா? அவருடைய நாவு தான். ஞானப் பழமான கந்தன் நடக்கும் இடம் அது. அந்த மாலைக்கு வாசனை வேண்டுமே, ஞானம் எனும் நறுமணத்தைத் தடவினால் என்ன? ஞானமாலை ஆதலால் அது தானாகவே ஒளி வீசுகிறது. அந்த மாலையைச் சுற்றி குற்றமற்ற அவருடைய புத்தி எனும் வண்டு ரீங்காரமிடுகிறது. இவ்வாறு ஆயிரத்து நானூற்று நாப்பத்து ஐந்து சப்தமந்திரங்களைக் கொண்ட ஐம்பத்தொரு அக்ஷரங்களால் ஆன இந்த ‘மாத்ருகா புஷ்ப மாலை’யை உன் அழகிய திருப் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்’ இதை போன்றே பக்தியுடன் நம் மனதையும் ஆண்டவனிடம் சமர்ப்பிக்கச் சொல்கிறார் அருணகிரிநாதர்
ஆசைகூர் பத்தனேன் மனோபத்மமான பூ வைத்து நடுவே
அன்பான நூலிட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி ஒரு ஞான
வாசம் வீசிப்ரகாசியா நிற்பமாசிலோர் புத்தி அளிபாட

மாத்ருகா புஷ்பமாலை கோலப்ரவாள பாதத்தில் அணிவேனோ


வள்ளியைக் கவர்ந்த வள்ளல்


 “Divinity in love or divine love is too mystic to have a common perception and interpretation” என்று கூறுவதுண்டு.

தெய்வீகக் காதல் என்பதை மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும்.
பலாப்பழத்தின் சுவை வேண்டுமானால் தோலை உரிக்கச் சிரமப் படவேண்டும். 
வள்ளியின் காதலின் மாதுர்யம் வேண்டுமானால் சிறிது ஆன்மீகத்தையும் இடையிடையே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஸத் என்ற பரம்பொருள், புருஷ வடிவில் நாம ரூபம் எடுக்கும் பொழுது, சிச்சக்தி எனும் மாயை தன்னை ஞான சக்தி, க்ரியா சக்தி, இச்சா சக்தி எனப் பிரித்து  கொள்கிறாள். க்ரியையும் இச்சையும் பெண் உருவை எடுக்க, ஞானம்  பரம்பொருளிடமே தங்குகிறது. ஆகவேதான், பரம சிவனுக்கு, கங்கையும் பார்வதியும், திருமாலுக்கு ஸ்ரீ தேவியும் பூ தேவியும், கணபதிக்கு சித்தியும் புத்தியும், நான்முகனுக்கு சாவித்ரியும் ஸரஸ்வதியும் தேவிகளாக வரிக்கப் படுகின்றனர். நம் கதாநாயகன் முருகன். அவனுக்கும் இரண்டு சக்திகள்; வள்ளி தெய்வயானை.

அவர்களின் குலம் என்ன கோத்திரம் என்ன? பரம்பொருளான முருகனுக்கு அவர்கள் ஏற்றவர்கள்தானா? ஏன் தெய்வயானை விட வள்ளியை நாம் அதிகம் கொண்டாடுகிறோம்? இதற்கான விடைகளைத்தான் நாம் சுருக்கமாகக் காணப் போகிறோம்.

கார்த்திகேயன் பரமசிவனின் கண்ணிலிருந்து உதித்தவன் அல்லவா? சமமான குலம் என்றால் இரு சக்திகளும் கண்களிலிருந்துதானே உதிக்க வேண்டும். கோத்திரம்? அதே கோத்திரம் இல்லாவிட்டாலும் அதற்குச் சமதையான கோத்திரம் வேண்டுமே! பார்த்தார் நாரதர். திருமாலிடம் சென்று முக்கண்ணன் முகத்திலிருந்து உதித்த முருகனைப் பற்றியும் ஆடல்வல்லானின் ஆனந்த நடனத்தைப் பற்றியும் எடுத்துரைத்தார். மாலவனின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர்த்துளிகள் இரு முத்துகளாக விழுந்தன. அது போதுமே நாரதருக்கு. இரு துளிகளும் இரு தேவ கன்னிகைகளாக மாறினர். அமுத வல்லி என்றும் ஸுந்தரவல்லி என்று பெயர் பெற்றனர். முருகனுக்கு முறைப் பெண்கள் வேறு. சகோதரிகளுக்கும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மனமில்லை. ஒரே கணவனை அடைய நாரதர் இருவரையும் தவம் செய்யச் சொன்னார்.

உரிய சமயத்தில் அமுத வல்லி இந்திரனுக்குப் பெண் ஆனாள். தேவஸேனா என்ற பெயரும் கொண்டாள். அவள் க்ரியா சக்தியின் உருவகம். அவள் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு தவமியற்றினாள். ஆரவாரமில்லாமல் அதே சமயம் ராஜகுமாரியாக இருப்பதால், தான் நினைத்ததை சுலபமாக சாதித்துக் கொண்டாள். சூரபத்மனின் வதம் ஆயிற்று. ஊரறிய உலகறிய திருமணம் மூலம் முருகனை அடைகிறாள். அவனும் தேவசேனாபதி ஆகிறான். தேவ லோகமே பயனடைகிறது.
ஆனால் வள்ளி அல்லவோ நம் நாயகி? அவளைப் பற்றி அல்லவா பேச வந்திருக்கிறோம்!
முருகனின் அருள் தேவலோகத்துக்கு மட்டும் தானா? அதிகாரமும், செல்வமும், பதவியும் இல்லாத பாமரர்களுக்குக் கிடையாதா?
அதுவும் நம்மால் முடியும் என்பதைக் காட்டத்தான் வள்ளியைக் கவர்ந்த வள்ளல் நம்மிடையே வலம் வருகிறான். சூரியனின் கிரணங்கள் கோயில் குளத்திற்கும் தேங்கி நிற்கும் குட்டைக்கும் வித்தியாசம் பார்ப்பதில்லை. முருகனுக்கும் அரசகுமாரியும் குறத்தியும் ஒரே மாதிரி தான். அவன் வேண்டுவதெல்லாம் அனன்ய பக்தி ஒன்றே. அதுவும் அவன் புதிதாக ஒன்றும் செய்யவில்லை. தன் அப்பாவின் தடத்தில் தான் சென்றான். சிவனார் தான் கண்ணப்பனின் பூஜையை ஏற்றுக் கொண்டிருக்கிறரே. ஒரு வேளை தன் பையனின் மாமனார் குலம் எப்படிப் பட்டது என்று சோதனை செய்து பார்த்திப்பாரோ!
வள்ளி என்பவள் யார்? அவள் பின்னணி என்ன? 
வள்ளிமலைச் சாரலில் ஸ்ரீமன் நாராயணர் சிவமுனி என பெயர் கொண்டு தவம் செய்து வருகிறார். மஹாலக்ஷ்மி மானாக மாறி அவர் முன் துள்ளி விளையாடுகிறாள். அவர் அருட்பார்வையால் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். வள்ளிக்கிழங்கு குழியில் பெண்மகவு ஒன்று ’குவா குவ” என்று அழுகிறது. இது நாள் வரை வேடர்களின் தலைவனான நம்பிராஜன் பல மகன்களைப் பெற்றும் ஒரு பெண் குழந்தைக்காக மலைத் தெய்வமான முருகனிடம் முறையிட்டுக் கொண்டிருந்தான். ஒரு காலத்தில் பெண்குழந்தைக்காகத் தவம் கூட இருந்திருக்கிறார்கள் பாருங்கள். தவத்தின் பயன், அன்று  அந்த வழியாக வந்த நம்பிராஜன் குழந்தையின் அழுகுரல் கேட்டு சிலிர்க்கிறான். கச்சியப்ப சிவாச்சாரியார், கந்தபுராணத்தில் வள்ளியின் பிறப்பை இவ்வாறு விவரிக்கிறார்.
“கொல்லை பிறந்த கொடியோடு கானவர்கோன்,
அல்லை நிகர்குழலாள் அம்மென்குரல்கேளா,
எல்லையதனில் எழுமொலியங்கேதென்னா,
வல்லைதனில் அவ்வறும்புனத்தில் வந்தனனே”

“வந்தான் முதலெடுத்த வள்ளிக்குழியில் வைகும் நந்தா  விளக்கனைய நங்கைதனை நோக்கி இந்தா
இதோ இளங்குழவி என்றெடுத்துச்
சிந்தாகுலம் தீரத் தேவி கையில் ஈந்தனனே.” தேவி உன் குறை தீர்ந்தது. இந்தா இந்த பெண் குழந்தயை எடுத்து நம் மகள் போல் வளர்த்து வா என்றான்.

வள்ளி சிறு பெண் குழந்தை எப்படி வளர்ந்தாள்? பொற்தொட்டிலில் இருந்தாள், தளர் நடையிட்டாள்,, முற்றத்தில் உலவினாள், குதலை மொழி பேசினாள். அம்மானைப் பருவம் வந்தது. அம்மானைப் பருவம் என்பது சிறு பெண்கள் கழங்கற்களை தூக்கிப் போட்டு ஆடும் பருவம்.  கவண் கல் எறியக் கற்றுக் கொண்டாள். வேடுவர்கள் வெளியில் வேட்டைக்காகச் செல்லும் பொழுது, சிறு பெண்களே தினை விளையும் வயல்களை பாதுகாப்பது சிறு பெண்களின வேலையாக இருந்தது. நம்பி ராஜனும் வள்ளி தினைப்புனத்தில் ஏனல் காக்க நல்ல நாள் பார்த்தான். அதே நாளில் வள்ளி தன் மணாளனை தன் மனதில் இருத்தினாள். இதோ கந்த புராணம்
“ஆன பருவங்கண்டு அம்மனையும், அம்மன்னையில் கோனும் ஒரு தங்குலத்தின் முறை நோக்கி மானின் வயிற்றுதித்த வள்ளிதன்னை பைம்புனத்தில் ஏனல் வினையுள் இனிதளிக்க, வைத்தனரே”
“பாங்கியருடன் முற்றாதனத்திற்கினிய வள்ளியை நெற்றாப் பசுங்கதிர் ஏனல் காக்க புள்ளோட்ட வைத்தனரே.”
“காட்டில் எளிதுற்ற கடவுள் மணியைக் கொணர்ந்து கூட்டில் இருளோட்டக் குருகுய்த்தவாறன்றோ? தீட்டுச்சுடர் வேற்குமரன் தேவியாந் தெள்ளமுதை பூட்டுச்சிலைக் கையால் புனங்காய்ப்ப வைத்ததுவே.”
வள்ளிக்கும் இது தான் தருணம். சில பாங்கியர் மட்டுமே இருப்பதால், அவளால் தான் எடுத்த பிறப்பிற்குப் பயன் தேட ஆரம்பிக்கிறாள்.
அவள் மனம் முருகன்பால் சென்று விடுகிறது. முனிவர்களும், தேவர்களும், மும்மூர்த்திகளும் காண விழையும் பரம்பொருளை ஒரு சாதாரண வேடுவப் பெண் காதல் செய்வதா? காதலுக்குத் தான் கண்ணில்லையே. அன்பு கொள்வது மட்டுமே அவள் வேலை. ஆட்கொள்வதும் கொள்ளாததும் அவன் பாடு அல்லவா?
அவன் மலைத் தெய்வம் அல்லவா? வள்ளி தான் வாசம் செய்யும் மலைகளைப் பற்றிப் பாடுகிறாள். கொல்லி மலை எங்கள் மலை அம்மே என் கொழுனனுக்கோ பழனி மலையம்மே.! குற்றாலக் குறவஞ்சி எனும் நாட்டு பாடலின் அருவியில் கந்தனின் காதலிலும் வள்ளியின் அன்பிலும் நாம் நாளெல்லாம் குளித்து எழலாம்.
பூவைகள் செங்கண் புறவங்கள் ஆலோலம், தூவி மஞ்ஞைகாள் சொற்கிளிகாள் ஆலோலம், கூவல் சேர்வுற்ற குயிலினங்காள் ஆலோலம், சேவல்காள் ஆலோலம் என்று பாடுகிறாள்.
வள்ளி பறவைகளை கவண் கல்  எறிந்து ஓட்டும் பொழுது அவள் கண்கள் நான்கு பக்கமும் சுழன்றன, அவை கிளிகளை மட்டுமா தேடின? முருகனையும்  அல்லவா தேடின. குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட கொடிதான துன்ப மயல் தீர அவள் கண்கள் வாடின. வல்லிபடர் சாரல் வள்ளி மலைமேவு வள்ளி மணவாளனைத் தேடுகிறாள்.
அருணகிரியிடம் சென்று விட்டால், இன்றெல்லாம் வள்ளியைப் பற்றிக் படித்துக் கொண்டிருக்காலாம்.
வள்ளி தன் சகிகளை கேட்கிறாள் “கந்தனைக் கண்டீர்களா, கன்னித் தமிழ் பெண்டீர்களா? அங்கம் எல்லாம் தங்க நிறம் அவன் பேர் ஆறுமுகம்: கையிலே வேலிருக்கும் அவன் கண்களில் ஒளியிருக்கும் நெற்றியிலே நீறிருக்கும் அதன் மத்தியிலே பொட்டிருக்கும்: செம்பவழ இதழ் இருக்கும் திங்களைப் போல் முகமிருக்கும்  எந்தன் கந்தனைக் கண்டீர்களா?
அவனைக் கணவனாகவே வரித்து விட்டு, பாடுகிறாள், அஞ்சு வயதினிலே அறியாப் பருவத்திலே பிஞ்சிலே கூடினேனடி கிளியே பிரிய மனமில்லையே, மாடு மனை போனால் என்ன, மக்கள் சுற்றம் போனால் என்ன கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே, அவன் குறு நகை போதுமடி, இவ்வாறு வள்ளி கணவன் பேரை வழிப் போக்கர் சொன்னாலும் அவள் உள்ளம் குழைகிறது, அவள் ஊன் உருகுகிறது.
முருகனின் மனமும் இளகுகிறது. கச்சியப்பர் சொல்கிறார் இந்த முறையில் இவள் ஏனற்புனம் காப்ப அந்த அளவில் அவளுக்கருள் புரியக் கந்த மலை நீங்கி கதிர்வேலவன் தனியே வந்து தணிகை மலை ஏகி வள்ளி மலை வருகின்றான்.
வேடனாக வருகிறான். அவள் முகம் கொடுத்துப் பேசவில்லை. அவன் அன்புடன் அவளிடம் கேட்கிறான், வாரிருங்கூந்தல் நல்லாய் மதி தளர்வேன் உந்தன் பெரினை உணர்த்தி, வேறு ஏதாவது பேசு, பேரைக் கூறாவிட்டாலும் ஊரைச் சொல், அதுவும் இல்லை எனில் அதற்கான வழிச் சொல் என்கிறான். அச்சமயம் அவள் தந்தை வருவதைப் பார்த்து வேங்கை மரமாகி நிற்கிறான். பின்னர் கிழவனாக வந்து கெஞ்சுகிறான். பேசாவிட்டாலும் விழியால் நோக்கு, அதுவும் இல்லையெனில், சற்றாவது மனம் உருகி முகத்தையாவது காட்டு என்று. வள்ளி கிழவனுக்குத் தேனும் தினை மாவும் தருகிறாள் ஆனால் தன் இதயத்தைத் தருவதில்ல. அதில் கந்தன் மட்டும் தானே இருக்கிறான்?.  அவன் மேலும் குழைகிறான். பாம்பன் ஸ்வாமிகள் தன் ‘பஞ்சாமிர்த வண்ணத்தில்’ ஏதோ தானே நேரில் கண்டது போல மிக அழகாக வர்ணிக்கிறார். ‘ என் கண்ணே, இள மானே, கனியே, வருந்தும் என் முன் வந்தருளாய், மயிலே, குயிலே எழிலே, உன் மடிக்கொரு வந்தனம், உன் வளைக்கொரு வந்தனம், உன் அடிக்கொரு வந்தனம், உன் விழிக்கொரு வந்தனம், என்னை வா என்ற ஒரே ஒரு மொழி பகர்வாய்’ என்றெல்லாம் மையல் மொழி பேசுகிறான். அவன் வள்ளி பதம் பணிந்த அதி மோக தயாபரன். அருணகிரிநாதர் எப்படியெல்லாம் கூறுகிறார்? அருணகிரிநாதர், “கத்திய தத்தை கலைத்து விழ திரி கற்கவண் இட்டெறி தினைகாவல் கற்ற குறத்தி நிறத கழுத்தடி கட்டியணைத்த பன்னிரு தோளா; வடநாட்டில் வெள்ளி மலை காத்து புள்ளி மயில் மேல் திகழ்ந்த குமரேசன் அவன்; வடி வாட்டி வள்ளி அடிபொற்றி வள்ளி மலை காத்த மணவாளா.
மேலும், வதன சரோருஹ என்ற திருப்புகழில், “வள்ளிபுனத்தில் நின்றுகொண்டு கந்தன், அழகிய வள்ளியே, என் வீடு தணிகையில், இதோ இரண்டரை காதம் தூரத்தில் தான் உள்ளது என்னுடன் வாராய் என கெஞ்சுகிறான்” என்று பாடுகிறார்.
அதன் பின் யானைமுகன் வந்து அவர்களைச் சேர்த்து வைப்பதை நாம் அறிவோம். அத்துயரது கொடு சுப்பிரமணிபடும் அப்புனமதனிடை இபமாகி, அக்குறமகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே.

1930 களில் கானாடுகாத்தான் பகுதியில் கவி விச்வநாத சர்மா என்பவர் கீதா காங்கேயம் எனும் பாமாலையை இயற்றினார். இது கீத கோவிந்தத்தைப் போலவே உள்ளது.எப்படி பஜனை ஸம்ப்ரதாயத்தில் ராதா பரிணயத்தில் அஷ்டபதி முக்கியமோ அது போலவே வல்லி கல்யாணத்திலும் இந்த கீத காங்கேயம் பாடப் படுகிறது. அதில் வள்ளி-முருகனின் லீலைகள் எல்லாம் வருகின்றன. அதில் 22 வது அஷ்டபதியில் இதோ இரண்டு வரிகள்

वल्ली सुवदन सन्निधि विकसित सरस विलॊचन भाजं हृदमिव हिमकर दर्शन पुल्लस मधुरस नील सरॊजम्
गिरिजा तनुजम् समुदित मदन विकासम् | आससाद समहार्धं सौगुरु मुदमिध कुञ्ज निवासम् ||
वल्यालॊकज निजमुदमपि तत् वचन समयमभि दातुम्| शृतिनिकरगतां दृशमधिददतं रुचि जित सुमशर कॆतुम् ||

ஆக, பரமாத்மாவான முருகன் வலியச் சென்று ஜீவாத்மாவான வள்ளியை தனதாக்கிக் கொண்டதே  இதன் தத்துவம்.
இது வள்ளியின் திருமணம் மட்டுமல்ல. நம் ஒவ்வொருவரின் திருமணமும் கூட. ஆண்டவனை அடையும் பொருட்டு ஒவ்வொரு ஜீவனும் கொண்டுள்ள ஏக்கத்தை பக்தி பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் பாடி, ஆடி, கசிந்து உருகி, ப்ரபஞ்சத்தின் ஒரே புருஷனாகிய ஸுப்ரமண்யனை (பரப்ரம்மத்தை) அடைவதே இந்த திருமணத்தின் நோக்கமாகும்.

வள்ளி என்ற உருவகம் கொண்ட ஜீவாத்மாவை இப்பொழுது சந்திப்போம். அவள் பிறந்த குலம் வேடுவர் குலம். அதாவது சாதாரண குலத்தில் பிறந்தவள். ஆனால் வள்ளி என்ற ஜீவன் மற்ற ஜீவன்களைவிட மேம்பட்டு இருக்கிறது. அவள் இறைவனைப் பற்றித் தெரிந்து வைத்து இருக்கிறாள், இன்னும் அறியவில்லை. நேரே காண விழைகிறாள். மறுமைக்கு முக்தியை தேடுகிறாள்.

அஷ்டாங்க யோகம் மூலமாகப் பெரு முயற்சி செய்கிறாள். முதல் இரண்டு அங்கங்களான இயமம், நியமம் மூலம் உயிர் குடி கொண்டுள்ள உடலை கோவிலாக பேணுகிறாள். முதல் குருவாகிய தந்தை அவளை தினைப்புனத்திற்குத் தவம் செய்ய அழத்துச் செல்கிறார். அவள் புற அழுக்குகள் படாமல் 'சிற்றேனல்' காக்கின்றாள். இதற்காக யோகாசனம் பயில்கிறாள். ' ஹம்ஸோஹம் ஆலோலம்' பாடி மகிழ்கிறாள். 'ப்ரத்தியாகாரம் என்னும் யோக வகையில் எதிர்மறைகளான கோபம் மற்றும் மத மாச்சரியங்களை அறவே நீக்குகிறாள். இதையே 'குருவி ஓட்டித்' திரிந்த பெண்ணாக அருணகிரியார் காண்கிறார். 'தியானம்' மற்றும் 'தாரணை' மூலமாக மனதை ஒருமுகப்படுத்தித் தவம் மேற்கொள்கிறாள். சமாதி' எனப்படும் எட்டாவது அங்கத்தில் பரப்ரம்மத்துடன் ஒன்றுவதற்குண்டான நிலை பெற அவளுடைய முயற்சி மட்டும் போதவில்லை. அத்தருணத்தில் பரமாத்மாவான முருகன் அவளை ஆட்கொள்ள வருகிறான்.

முதலில் அவளை பரிட்சை செய்ய அவர்களில் ஒருவனான வேடுவனாக வந்து மணம் புரியக் கேட்கிறான். வள்ளி உலக வாழ்க்கையில் உழல மறுக்கிறாள். ஆனால் வந்தது பரப்ப்ரம்மம் என்று அறியவில்லை. முருகன் வேங்கை மரமாக உரு எடுக்கிறான். அஞ்ஞான இருளை அகற்றி ஞானம் தரும் தருவாக நிற்கிறான். அதன் பின் கிழவனாக (தலைவனாக) வந்து ஆச்ரயிக்கிறான். குருவாகி தீட்சை (தீக்கை) தந்து மும்மலங்களையும் இருவினையையும் போக்குகிறான்.

இப்பொழுது வள்ளி என்னும் ஜீவன், சத்தினிபாதத்திற்கு (மறைந்திருந்து அருள் பாலித்தல்) உரியவள் ஆகிறாள். ஓம்கார மந்திரத்தின் உட்பொருளை முருகன் உணர்த்துகிறான். ப்ரவணத்தின் நாயகனான விநாயகர், யானையின் உருவம் தாங்கி வருவது இதை குறிக்கிறது. பரமாத்ம - ஜீவ - ஸ்வருப - ஐக்யத்தை உலகுக்கு உணர்த்துவதுதான் வள்ளித்  திருமணத்தின் உட்கருத்து. ஆசைநாலு எனும் திருப்புகழில் கீழ் கண்டவாறு அருணகிரி கூறுகிறார்:

 ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்திபெற
 மூலவாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர்
 யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய்
 காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர்புகழ் தம்பிரானே.

இன்றளவும் இந்த மார்க்கத்தை வள்ளி சன்மார்க்கம் என்றே முருகனின் பக்தர்கள் போற்றி வருகின்றனர்.