“Divinity in love or divine love is too mystic
to have a common perception and interpretation” என்று கூறுவதுண்டு.
தெய்வீகக் காதல் என்பதை மிகவும் எச்சரிக்கையுடன்
கையாளவேண்டும்.
பலாப்பழத்தின் சுவை வேண்டுமானால் தோலை உரிக்கச் சிரமப்
படவேண்டும்.
வள்ளியின் காதலின் மாதுர்யம் வேண்டுமானால் சிறிது ஆன்மீகத்தையும் இடையிடையே
நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஸத் என்ற பரம்பொருள், புருஷ வடிவில் நாம ரூபம் எடுக்கும்
பொழுது, சிச்சக்தி எனும் மாயை தன்னை ஞான சக்தி, க்ரியா சக்தி, இச்சா சக்தி எனப் பிரித்து கொள்கிறாள். க்ரியையும் இச்சையும் பெண் உருவை எடுக்க,
ஞானம் பரம்பொருளிடமே தங்குகிறது. ஆகவேதான்,
பரம சிவனுக்கு, கங்கையும் பார்வதியும், திருமாலுக்கு ஸ்ரீ தேவியும் பூ தேவியும், கணபதிக்கு
சித்தியும் புத்தியும், நான்முகனுக்கு சாவித்ரியும் ஸரஸ்வதியும் தேவிகளாக வரிக்கப்
படுகின்றனர். நம் கதாநாயகன் முருகன். அவனுக்கும் இரண்டு சக்திகள்; வள்ளி தெய்வயானை.
அவர்களின் குலம் என்ன கோத்திரம் என்ன? பரம்பொருளான
முருகனுக்கு அவர்கள் ஏற்றவர்கள்தானா? ஏன் தெய்வயானை விட வள்ளியை நாம் அதிகம் கொண்டாடுகிறோம்?
இதற்கான விடைகளைத்தான் நாம் சுருக்கமாகக் காணப் போகிறோம்.
கார்த்திகேயன் பரமசிவனின் கண்ணிலிருந்து உதித்தவன்
அல்லவா? சமமான குலம் என்றால் இரு சக்திகளும் கண்களிலிருந்துதானே உதிக்க வேண்டும். கோத்திரம்?
அதே கோத்திரம் இல்லாவிட்டாலும் அதற்குச் சமதையான கோத்திரம் வேண்டுமே! பார்த்தார் நாரதர்.
திருமாலிடம் சென்று முக்கண்ணன் முகத்திலிருந்து உதித்த முருகனைப் பற்றியும் ஆடல்வல்லானின்
ஆனந்த நடனத்தைப் பற்றியும் எடுத்துரைத்தார். மாலவனின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர்த்துளிகள்
இரு முத்துகளாக விழுந்தன. அது போதுமே நாரதருக்கு. இரு துளிகளும் இரு தேவ கன்னிகைகளாக
மாறினர். அமுத வல்லி என்றும் ஸுந்தரவல்லி என்று பெயர் பெற்றனர். முருகனுக்கு முறைப்
பெண்கள் வேறு. சகோதரிகளுக்கும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மனமில்லை. ஒரே கணவனை அடைய
நாரதர் இருவரையும் தவம் செய்யச் சொன்னார்.
உரிய சமயத்தில் அமுத வல்லி இந்திரனுக்குப் பெண் ஆனாள்.
தேவஸேனா என்ற பெயரும் கொண்டாள். அவள் க்ரியா சக்தியின் உருவகம். அவள் திரைக்குப் பின்னால்
இருந்து கொண்டு தவமியற்றினாள். ஆரவாரமில்லாமல் அதே சமயம் ராஜகுமாரியாக இருப்பதால்,
தான் நினைத்ததை சுலபமாக சாதித்துக் கொண்டாள். சூரபத்மனின் வதம் ஆயிற்று. ஊரறிய உலகறிய
திருமணம் மூலம் முருகனை அடைகிறாள். அவனும் தேவசேனாபதி ஆகிறான். தேவ லோகமே பயனடைகிறது.
ஆனால் வள்ளி அல்லவோ நம் நாயகி? அவளைப் பற்றி அல்லவா
பேச வந்திருக்கிறோம்!
முருகனின் அருள் தேவலோகத்துக்கு மட்டும் தானா? அதிகாரமும்,
செல்வமும், பதவியும் இல்லாத பாமரர்களுக்குக் கிடையாதா?
அதுவும் நம்மால் முடியும் என்பதைக் காட்டத்தான் வள்ளியைக்
கவர்ந்த வள்ளல் நம்மிடையே வலம் வருகிறான். சூரியனின் கிரணங்கள் கோயில் குளத்திற்கும்
தேங்கி நிற்கும் குட்டைக்கும் வித்தியாசம் பார்ப்பதில்லை. முருகனுக்கும் அரசகுமாரியும்
குறத்தியும் ஒரே மாதிரி தான். அவன் வேண்டுவதெல்லாம் அனன்ய பக்தி ஒன்றே. அதுவும் அவன்
புதிதாக ஒன்றும் செய்யவில்லை. தன் அப்பாவின் தடத்தில் தான் சென்றான். சிவனார் தான்
கண்ணப்பனின் பூஜையை ஏற்றுக் கொண்டிருக்கிறரே. ஒரு வேளை தன் பையனின் மாமனார் குலம் எப்படிப்
பட்டது என்று சோதனை செய்து பார்த்திப்பாரோ!
வள்ளி என்பவள் யார்? அவள் பின்னணி என்ன?
வள்ளிமலைச் சாரலில் ஸ்ரீமன் நாராயணர் சிவமுனி என
பெயர் கொண்டு தவம் செய்து வருகிறார். மஹாலக்ஷ்மி மானாக மாறி அவர் முன் துள்ளி விளையாடுகிறாள்.
அவர் அருட்பார்வையால் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். வள்ளிக்கிழங்கு குழியில்
பெண்மகவு ஒன்று ’குவா குவ” என்று அழுகிறது. இது நாள் வரை வேடர்களின் தலைவனான நம்பிராஜன்
பல மகன்களைப் பெற்றும் ஒரு பெண் குழந்தைக்காக மலைத் தெய்வமான முருகனிடம் முறையிட்டுக்
கொண்டிருந்தான். ஒரு காலத்தில் பெண்குழந்தைக்காகத் தவம் கூட இருந்திருக்கிறார்கள் பாருங்கள்.
தவத்தின் பயன், அன்று அந்த வழியாக வந்த நம்பிராஜன்
குழந்தையின் அழுகுரல் கேட்டு சிலிர்க்கிறான். கச்சியப்ப சிவாச்சாரியார், கந்தபுராணத்தில்
வள்ளியின் பிறப்பை இவ்வாறு விவரிக்கிறார்.
“கொல்லை பிறந்த கொடியோடு கானவர்கோன்,
அல்லை நிகர்குழலாள் அம்மென்குரல்கேளா,
எல்லையதனில் எழுமொலியங்கேதென்னா,
வல்லைதனில் அவ்வறும்புனத்தில் வந்தனனே”
“வந்தான்
முதலெடுத்த வள்ளிக்குழியில் வைகும் நந்தா விளக்கனைய
நங்கைதனை நோக்கி இந்தா
இதோ இளங்குழவி என்றெடுத்துச்
சிந்தாகுலம் தீரத் தேவி கையில் ஈந்தனனே.” தேவி உன்
குறை தீர்ந்தது. இந்தா இந்த பெண் குழந்தயை எடுத்து நம் மகள் போல் வளர்த்து வா என்றான்.
வள்ளி சிறு பெண் குழந்தை எப்படி வளர்ந்தாள்? பொற்தொட்டிலில்
இருந்தாள், தளர் நடையிட்டாள்,, முற்றத்தில் உலவினாள், குதலை மொழி பேசினாள். அம்மானைப்
பருவம் வந்தது. அம்மானைப் பருவம் என்பது சிறு பெண்கள் கழங்கற்களை தூக்கிப் போட்டு ஆடும்
பருவம். கவண் கல் எறியக் கற்றுக் கொண்டாள்.
வேடுவர்கள் வெளியில் வேட்டைக்காகச் செல்லும் பொழுது, சிறு பெண்களே தினை விளையும் வயல்களை
பாதுகாப்பது சிறு பெண்களின வேலையாக இருந்தது. நம்பி ராஜனும் வள்ளி தினைப்புனத்தில்
ஏனல் காக்க நல்ல நாள் பார்த்தான். அதே நாளில் வள்ளி தன் மணாளனை தன் மனதில் இருத்தினாள்.
இதோ கந்த புராணம்
“ஆன பருவங்கண்டு அம்மனையும், அம்மன்னையில் கோனும்
ஒரு தங்குலத்தின் முறை நோக்கி மானின் வயிற்றுதித்த வள்ளிதன்னை பைம்புனத்தில் ஏனல் வினையுள்
இனிதளிக்க, வைத்தனரே”
“பாங்கியருடன் முற்றாதனத்திற்கினிய வள்ளியை நெற்றாப்
பசுங்கதிர் ஏனல் காக்க புள்ளோட்ட வைத்தனரே.”
“காட்டில் எளிதுற்ற கடவுள் மணியைக் கொணர்ந்து கூட்டில்
இருளோட்டக் குருகுய்த்தவாறன்றோ? தீட்டுச்சுடர் வேற்குமரன் தேவியாந் தெள்ளமுதை பூட்டுச்சிலைக்
கையால் புனங்காய்ப்ப வைத்ததுவே.”
வள்ளிக்கும் இது தான் தருணம். சில பாங்கியர் மட்டுமே
இருப்பதால், அவளால் தான் எடுத்த பிறப்பிற்குப் பயன் தேட ஆரம்பிக்கிறாள்.
அவள் மனம் முருகன்பால் சென்று விடுகிறது. முனிவர்களும்,
தேவர்களும், மும்மூர்த்திகளும் காண விழையும் பரம்பொருளை ஒரு சாதாரண வேடுவப் பெண் காதல்
செய்வதா? காதலுக்குத் தான் கண்ணில்லையே. அன்பு கொள்வது மட்டுமே அவள் வேலை. ஆட்கொள்வதும்
கொள்ளாததும் அவன் பாடு அல்லவா?
அவன் மலைத் தெய்வம் அல்லவா? வள்ளி தான் வாசம் செய்யும்
மலைகளைப் பற்றிப் பாடுகிறாள். கொல்லி மலை எங்கள் மலை அம்மே என் கொழுனனுக்கோ பழனி மலையம்மே.!
குற்றாலக் குறவஞ்சி எனும் நாட்டு பாடலின் அருவியில் கந்தனின் காதலிலும் வள்ளியின் அன்பிலும்
நாம் நாளெல்லாம் குளித்து எழலாம்.
பூவைகள் செங்கண் புறவங்கள் ஆலோலம், தூவி மஞ்ஞைகாள்
சொற்கிளிகாள் ஆலோலம், கூவல் சேர்வுற்ற குயிலினங்காள் ஆலோலம், சேவல்காள் ஆலோலம் என்று
பாடுகிறாள்.
வள்ளி பறவைகளை கவண் கல் எறிந்து ஓட்டும் பொழுது அவள் கண்கள் நான்கு பக்கமும்
சுழன்றன, அவை கிளிகளை மட்டுமா தேடின? முருகனையும்
அல்லவா தேடின. குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட கொடிதான துன்ப மயல் தீர அவள்
கண்கள் வாடின. வல்லிபடர் சாரல் வள்ளி மலைமேவு வள்ளி மணவாளனைத் தேடுகிறாள்.
அருணகிரியிடம் சென்று விட்டால், இன்றெல்லாம் வள்ளியைப்
பற்றிக் படித்துக் கொண்டிருக்காலாம்.
வள்ளி தன் சகிகளை கேட்கிறாள் “கந்தனைக் கண்டீர்களா,
கன்னித் தமிழ் பெண்டீர்களா? அங்கம் எல்லாம் தங்க நிறம் அவன் பேர் ஆறுமுகம்: கையிலே
வேலிருக்கும் அவன் கண்களில் ஒளியிருக்கும் நெற்றியிலே நீறிருக்கும் அதன் மத்தியிலே
பொட்டிருக்கும்: செம்பவழ இதழ் இருக்கும் திங்களைப் போல் முகமிருக்கும் எந்தன் கந்தனைக் கண்டீர்களா?
அவனைக் கணவனாகவே வரித்து விட்டு, பாடுகிறாள், அஞ்சு
வயதினிலே அறியாப் பருவத்திலே பிஞ்சிலே கூடினேனடி கிளியே பிரிய மனமில்லையே, மாடு மனை
போனால் என்ன, மக்கள் சுற்றம் போனால் என்ன கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே, அவன் குறு
நகை போதுமடி, இவ்வாறு வள்ளி கணவன் பேரை வழிப் போக்கர் சொன்னாலும் அவள் உள்ளம் குழைகிறது,
அவள் ஊன் உருகுகிறது.
முருகனின் மனமும் இளகுகிறது. கச்சியப்பர் சொல்கிறார்
இந்த முறையில் இவள் ஏனற்புனம் காப்ப அந்த அளவில் அவளுக்கருள் புரியக் கந்த மலை நீங்கி
கதிர்வேலவன் தனியே வந்து தணிகை மலை ஏகி வள்ளி மலை வருகின்றான்.
வேடனாக வருகிறான். அவள் முகம் கொடுத்துப் பேசவில்லை.
அவன் அன்புடன் அவளிடம் கேட்கிறான், வாரிருங்கூந்தல் நல்லாய் மதி தளர்வேன் உந்தன் பெரினை
உணர்த்தி, வேறு ஏதாவது பேசு, பேரைக் கூறாவிட்டாலும் ஊரைச் சொல், அதுவும் இல்லை எனில்
அதற்கான வழிச் சொல் என்கிறான். அச்சமயம் அவள் தந்தை வருவதைப் பார்த்து வேங்கை மரமாகி
நிற்கிறான். பின்னர் கிழவனாக வந்து கெஞ்சுகிறான். பேசாவிட்டாலும் விழியால் நோக்கு,
அதுவும் இல்லையெனில், சற்றாவது மனம் உருகி முகத்தையாவது காட்டு என்று. வள்ளி கிழவனுக்குத்
தேனும் தினை மாவும் தருகிறாள் ஆனால் தன் இதயத்தைத் தருவதில்ல. அதில் கந்தன் மட்டும்
தானே இருக்கிறான்?. அவன் மேலும் குழைகிறான்.
பாம்பன் ஸ்வாமிகள் தன் ‘பஞ்சாமிர்த வண்ணத்தில்’ ஏதோ தானே நேரில் கண்டது போல மிக அழகாக
வர்ணிக்கிறார். ‘ என் கண்ணே, இள மானே, கனியே, வருந்தும் என் முன் வந்தருளாய், மயிலே,
குயிலே எழிலே, உன் மடிக்கொரு வந்தனம், உன் வளைக்கொரு வந்தனம், உன் அடிக்கொரு வந்தனம்,
உன் விழிக்கொரு வந்தனம், என்னை வா என்ற ஒரே ஒரு மொழி பகர்வாய்’ என்றெல்லாம் மையல் மொழி
பேசுகிறான். அவன் வள்ளி பதம் பணிந்த அதி மோக தயாபரன். அருணகிரிநாதர் எப்படியெல்லாம்
கூறுகிறார்? அருணகிரிநாதர், “கத்திய தத்தை கலைத்து விழ திரி கற்கவண் இட்டெறி தினைகாவல்
கற்ற குறத்தி நிறத கழுத்தடி கட்டியணைத்த பன்னிரு தோளா; வடநாட்டில் வெள்ளி மலை காத்து
புள்ளி மயில் மேல் திகழ்ந்த குமரேசன் அவன்; வடி வாட்டி வள்ளி அடிபொற்றி வள்ளி மலை காத்த
மணவாளா.
மேலும், வதன சரோருஹ என்ற திருப்புகழில், “வள்ளிபுனத்தில்
நின்றுகொண்டு கந்தன், அழகிய வள்ளியே, என் வீடு தணிகையில், இதோ இரண்டரை காதம் தூரத்தில்
தான் உள்ளது என்னுடன் வாராய் என கெஞ்சுகிறான்” என்று பாடுகிறார்.
அதன் பின் யானைமுகன் வந்து அவர்களைச் சேர்த்து வைப்பதை
நாம் அறிவோம். அத்துயரது கொடு சுப்பிரமணிபடும் அப்புனமதனிடை இபமாகி, அக்குறமகளுடன்
அச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே.
1930 களில் கானாடுகாத்தான் பகுதியில் கவி விச்வநாத சர்மா என்பவர் கீதா காங்கேயம் எனும் பாமாலையை இயற்றினார். இது கீத கோவிந்தத்தைப் போலவே
உள்ளது.எப்படி பஜனை ஸம்ப்ரதாயத்தில் ராதா பரிணயத்தில் அஷ்டபதி முக்கியமோ அது போலவே
வல்லி கல்யாணத்திலும் இந்த கீத காங்கேயம் பாடப் படுகிறது. அதில் வள்ளி-முருகனின் லீலைகள்
எல்லாம் வருகின்றன. அதில் 22 வது அஷ்டபதியில் இதோ இரண்டு வரிகள்
वल्ली सुवदन सन्निधि विकसित सरस विलॊचन भाजं हृदमिव
हिमकर दर्शन पुल्लस मधुरस नील सरॊजम्
गिरिजा तनुजम् समुदित मदन विकासम् | आससाद समहार्धं
सौगुरु मुदमिध कुञ्ज निवासम् ||
वल्यालॊकज निजमुदमपि तत् वचन समयमभि दातुम्| शृतिनिकरगतां
दृशमधिददतं रुचि जित सुमशर कॆतुम् ||
ஆக, பரமாத்மாவான முருகன் வலியச் சென்று ஜீவாத்மாவான
வள்ளியை தனதாக்கிக் கொண்டதே இதன் தத்துவம்.
இது வள்ளியின் திருமணம் மட்டுமல்ல. நம் ஒவ்வொருவரின்
திருமணமும் கூட. ஆண்டவனை அடையும் பொருட்டு ஒவ்வொரு ஜீவனும் கொண்டுள்ள ஏக்கத்தை பக்தி
பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் பாடி, ஆடி, கசிந்து உருகி, ப்ரபஞ்சத்தின் ஒரே புருஷனாகிய
ஸுப்ரமண்யனை (பரப்ரம்மத்தை) அடைவதே இந்த திருமணத்தின் நோக்கமாகும்.
வள்ளி என்ற உருவகம் கொண்ட ஜீவாத்மாவை இப்பொழுது சந்திப்போம்.
அவள் பிறந்த குலம் வேடுவர் குலம். அதாவது சாதாரண குலத்தில் பிறந்தவள். ஆனால் வள்ளி
என்ற ஜீவன் மற்ற ஜீவன்களைவிட மேம்பட்டு இருக்கிறது. அவள் இறைவனைப் பற்றித் தெரிந்து
வைத்து இருக்கிறாள், இன்னும் அறியவில்லை. நேரே காண விழைகிறாள். மறுமைக்கு முக்தியை
தேடுகிறாள்.
அஷ்டாங்க யோகம் மூலமாகப் பெரு முயற்சி செய்கிறாள்.
முதல் இரண்டு அங்கங்களான இயமம், நியமம் மூலம் உயிர் குடி கொண்டுள்ள உடலை கோவிலாக பேணுகிறாள்.
முதல் குருவாகிய தந்தை அவளை தினைப்புனத்திற்குத் தவம் செய்ய அழத்துச் செல்கிறார். அவள்
புற அழுக்குகள் படாமல் 'சிற்றேனல்' காக்கின்றாள். இதற்காக யோகாசனம் பயில்கிறாள். '
ஹம்ஸோஹம் ஆலோலம்' பாடி மகிழ்கிறாள். 'ப்ரத்தியாகாரம் என்னும் யோக வகையில் எதிர்மறைகளான
கோபம் மற்றும் மத மாச்சரியங்களை அறவே நீக்குகிறாள். இதையே 'குருவி ஓட்டித்' திரிந்த
பெண்ணாக அருணகிரியார் காண்கிறார். 'தியானம்' மற்றும் 'தாரணை' மூலமாக மனதை ஒருமுகப்படுத்தித்
தவம் மேற்கொள்கிறாள். சமாதி' எனப்படும் எட்டாவது அங்கத்தில் பரப்ரம்மத்துடன் ஒன்றுவதற்குண்டான
நிலை பெற அவளுடைய முயற்சி மட்டும் போதவில்லை. அத்தருணத்தில் பரமாத்மாவான முருகன் அவளை
ஆட்கொள்ள வருகிறான்.
முதலில் அவளை பரிட்சை செய்ய அவர்களில் ஒருவனான வேடுவனாக
வந்து மணம் புரியக் கேட்கிறான். வள்ளி உலக வாழ்க்கையில் உழல மறுக்கிறாள். ஆனால் வந்தது
பரப்ப்ரம்மம் என்று அறியவில்லை. முருகன் வேங்கை மரமாக உரு எடுக்கிறான். அஞ்ஞான இருளை
அகற்றி ஞானம் தரும் தருவாக நிற்கிறான். அதன் பின் கிழவனாக (தலைவனாக) வந்து ஆச்ரயிக்கிறான்.
குருவாகி தீட்சை (தீக்கை) தந்து மும்மலங்களையும் இருவினையையும் போக்குகிறான்.
இப்பொழுது வள்ளி என்னும் ஜீவன், சத்தினிபாதத்திற்கு
(மறைந்திருந்து அருள் பாலித்தல்) உரியவள் ஆகிறாள். ஓம்கார மந்திரத்தின் உட்பொருளை முருகன்
உணர்த்துகிறான். ப்ரவணத்தின் நாயகனான விநாயகர், யானையின் உருவம் தாங்கி வருவது இதை
குறிக்கிறது. பரமாத்ம - ஜீவ - ஸ்வருப - ஐக்யத்தை உலகுக்கு உணர்த்துவதுதான் வள்ளித் திருமணத்தின் உட்கருத்து. ஆசைநாலு எனும் திருப்புகழில் கீழ் கண்டவாறு அருணகிரி கூறுகிறார்:
ஊமையேனை
ஒளிர்வித்து உனது முத்திபெற
மூலவாசல்
வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர்
யோக பேத
வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய்
காதல் சோலை
வளர் வெற்பில் உறை முத்தர்புகழ் தம்பிரானே.
இன்றளவும் இந்த மார்க்கத்தை வள்ளி சன்மார்க்கம் என்றே முருகனின் பக்தர்கள் போற்றி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக